க்ளாசிக் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் சிவாஜி கணேசன். பக்கம் பக்கமாக வசனம், நடிப்பில், வித்தியாசம் உடல் மொழி, என அனைத்திலும் தனக்கென தனி பாணியை வகுத்து தற்போதுள்ள இளம் தலைமுறை நடிகர்களுக்கு கொடுத்துள்ள சிவாஜி கணேசன் காலத்தால் அழிக்க முடியாத பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
நாடக நடிகராக இருந்து 1952-ல் வெளியான பராசக்தி படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமான சிவாஜிக்கு அந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது. இவரின் நடிப்பை பாராட்டிய பலரும் இது இவருக்கு முதல் படம் என்பது போல் தெரியவில்லை என்றும் பேசியதாக தகவல்கள் உண்டு. அதன்பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், என வரலாற்று தலைவர்கள் பலரை கண்முன் நிறுத்தினார்.
சினிமாவில் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவது, இன்று என்ன காட்சி என்று கேட்டுக்கொண்டு வீட்டில் இருந்தே அதற்காக தயாராக வருவது என சிவாஜியின் தொழில் பக்தி குறித்து அவருடன் பழகிய பலரும் இன்றும் பேசி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கௌரவம் படத்தில் நடித்த சுவாரஸ்யமாக அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்
சிவாஜி கணேசன் நடிப்பில் கடந்த 1973-ம் ஆண்டு வெளியான படம் கௌரவம். சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில் உஷா நந்தினி, பண்டரிபாய், நாகேஷ், செந்தாமரை, மேஜர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த் மற்றும் வழக்கறிஞர் கண்ணன் என்ற இரு வேடங்களில் நடித்திருந்தார். சிவாஜி. வியட்நாம் வீடு சுந்தரம் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
ஒரு நாள் பாரிஸ்டர் ரஜினிகாந்த் குறித்து காட்சிகளை எடுப்பதாக முந்தைய நாளே சிவாஜியிடம் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரம் கூறியுள்ளார். இதை கேட்ட சிவாஜி மறுநாள் பாரிஸ்டர் ரஜினிகாந்த் கெட்டப்பில் படப்பிடிப்புக்கு வந்துள்ளார். ஆனால் அன்றைய தினம் ரஜினிகாந்த் கேரக்டர் பற்றிய காட்சிகள் எடுக்க முடியாத சூழல் நிலவியுள்ளது.
இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த இயக்குனர், இது குறித்து சிவாஜியிடம் கூறியுள்ளார். சார் இன்று பாரிஸ்டர் ரஜினிகாந்த் காட்சிகள் எடுக்க முடியாது. நீங்கள் போய் கண்ணன் கேரக்டரில் வாருங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட சிவாஜி ஏண்டா! இது என்ன சட்டனு நெனச்சியாக உடனே போய் மாத்திக்கிட்டு வரதுக்கு... இங்க மட்டும் இல்லடா வீட்லயே நான் ரஜினிகாந்த் தான்.
நாளைக்கு என்ன கேரக்டர்னு சொல்லு இப்போ பேக்கப் சொல்லு என்று சிவாஜி சொல்ல உடனே வியட்நாம் வீடு சுந்தரம் பேக்கப் என்று கூறியுள்ளார். அடுத்து நிமிடம் சிவாஜி படப்பிடிப்பு தளத்தை விட்டு உடனடியாக கிளம்பிவிட்டார் என வியட்நாம் வீடு சுந்தரம் கூறியதாக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“