தமிழ் சினிமாவில் மக்கள் கலைஞர் என்று இன்று வரை போற்றப்படும் நடிகர் ஜெய்சங்கர். 1965-ம் ஆண்டு வெளியான இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்தியன் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்படும் ஜெய்சங்கர் சினிமாவில் பல தடைகளை தாண்டி நாயகனாக உயர்ந்துள்ளார்.
கல்லூரியில் படிக்கும்போதே சிவாஜியின் தீவிர ரசிகரான ஜெய்சங்கர் அவரை தனது குருவாக ஏற்றுக்கொண்டு நடிக்க வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். நடிகரும் அரசியல் விமர்சகருமான சோ ஜெய்சங்கருடன் கல்லூரியில் படித்தவர் என்பதால், சோ எழுதிய நாடகங்களில் ஜெய்சங்கர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அதன்பிறகு சிவாஜியுடன் நடிக்க ஜெய்சங்கருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
மருதநாட்டு வீரன் என்று தொடங்கப்பட்ட இந்த படத்தில் நடிக்க ஜெய்சங்கர் கமிட் செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாள் காலை இவரை அழைக்க கார் வரவே இல்லை. இதன் பிறகு ஸ்டூடியோவுக்கு போன் செய்து கேட்டபோது படப்பிடிப்பு நடப்பதாகவும், ஜெய்சங்கர் கேரக்டரில் வேறு ஒரு நடிகர் நடிப்பதாகவும், சிவாஜி தான் அவரை போட சொன்னதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதனால் மனம் நொந்த ஜெய்சங்கர், வேலைக்காக டெல்லி சென்ற நிலையில், சில வருடங்கள் கழித்து மீண்டும் வந்து நாயகனாக நடித்து பல வெற்றிகளை கொடுத்துள்ளார். அதன்பிறகு குலமா குணமா என்ற படததில் மீண்டும் சிவாஜியுடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய இந்த படத்தின் இடைவெளை நேரத்தில் தன்னை ஏன் மருதநாட்டு வீரன் படத்தில் இருந்து நீக்கினார் என்று ஜெய்சங்கர் சிவாஜியிடம் கேட்டுள்ளார்.
அப்போது தான் சிவாஜிக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் அவர் பெயரை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றும் ஜெய்சங்கர் தெரிந்துகொண்டுள்ளார். குலமா குணமா படத்தில் வரும் ஒரு காட்சியில் ஜெய்சங்கர் சிவாஜியின் காலில் விழுவது போன்ற ஒரு காட்சி இருக்கும். இது குறித்து இயக்குனர் ஜெய்சங்கரிடம் கூறிவிட்டு சிவாஜியின் அறைக்கு காட்சியை விளக்க சென்றுள்ளார். ஒரு மணி நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜெய்சங்கர் உதவி இயக்குனரிடம் கேட்டபோது, அவர் காட்சியை மாற்றி எழுதி வருகிறார். காரணம் நீங்கள் தான் என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியான ஜெய்சங்கர் இது பற்றி இயக்குனரிடம் விசாரித்தபோது, இப்போது ஜெய்சங்கர் பல படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் என் காலில் விழுந்தால் அவர் ஹீரோவாக நடிக்கும் படம் எப்படி ஓடும் நீ காட்சியை மாற்று என்று கூறியதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இதை கேட்ட ஜெய்சங்கர் மனதில் சிவாஜி தன்னை பற்றி இப்படி யோசித்திருக்கிறாதே என்று நினைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.