/indian-express-tamil/media/media_files/oioJ7b7EnIigjrvhO1ag.jpg)
சிவாஜி கணேசன்
தமிழ் சினிமாவில் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் எல்.வி.பிரசாத். 1963-ம் ஆண்டு இருவர் உள்ளம் படத்தை இயக்கிய இவர், அடுத்து மீண்டும் சிவாஜியை வைத்து ஒரு படம் இயக்க முடிவு செய்துள்ளார். அந்த படத்திற்காக, ஒரு தெலுங்கு படத்தின் கதையை உரிமம் வாங்கி வைத்திருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த படத்திற்கு ஆரூர்தாஸ் வசனம் எழுத வேண்டும் என்று அவரிடம் கேட்டுள்ளார்.
வசனம் எழுத அரூர்தாஸ் ஒப்புக்கொண்ட நிலையில், ஒரிஜினல் தெலுங்கு படத்தை அவருக்கு போட்டு காண்பித்துள்ளனர். படத்தை பார்த்த ஆரூர்தாஸ், இந்த படத்தில் ஒன்றுமே இல்லை. இந்த படம் தமிழில் எடுத்தால் சரியாக போகாது. இந்த கதையை தான் நீங்கள் எடுக்க வேண்டும் என்று விரும்பினால் என்னை விட்டுவிடுங்கள். வேறு ஒரு கதாசிரியரை வைத்து எடுங்கள். அப்படி நான் இந்த படத்தில் பணியாற்ற வேண்டும் என்றால் வேறு கதையை தேர்வு செய்யலாம் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட எல்.வி.பிரசாத், இந்த படத்திற்கு திரைக்கதை வசனம் நீங்கள் தான் பண்ண வேண்டும் என்று நான் முடிவு செய்துவிட்டேன். அதனால், வேறு கதையை பார்ப்போம் என்று சொல்லி ஒரு மராத்தி படத்தை காட்டியுள்ளார். அந்த படம் முழுதாக இல்லாத நிலையிலும் படத்தை பார்த்த ஆரூர்தாஸ் இந்த படத்தை பண்ணலாம் என்று கூறியுள்ளார். அதை கேட்ட எல்.வி.பிரசாத், படம் மொத்தம் 9 ஆயிரம் அடிதான் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு 16 ஆயிரம் அடிக்கு எப்படி கதை பண்ண முடியும் என்று கேட்டுள்ளார்.
இந்த படத்தை பார்க்கும்போதே எனக்கு திரைக்கதை வந்துவிட்டது என்று சொல்லி தனக்கு தோன்றிய கதையை கூறியுள்ளார். இதை கேட்டு எல்.வி.பிரசாத் ஓகே சொல்ல, இந்த கதை பெண் கேரக்டரை மையமாக வைத்தது. அதனால் சிவாஜி கணேசன் இதற்கு செட் ஆகமாட்டார் என்று ஆரூர்தாஸ் சொல்ல, நானும் அதையே தான் நினைத்தேன். பிறகு இந்த படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று எல்.வி.பிரசாத் கேட்டுள்ளார்.
ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான காதலிக்க நேரமில்லை படத்தில் ரவிச்சந்திரன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். நன்றாக நடிக்கிறார் நடனமாடுகிறார். அவரை நாயகனாக தேர்வு செய்யலாம். அதேபோல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய கற்பகம் படத்தில் கே.ஆர்.விஜயா என்ற நடிகை அறிமுகமாகியுள்ளார். அவரை நாயகியாக தேர்வு செய்யலாம் என்று சொல்ல, அதன்படி அவர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து படத்தை உருவாக்கியுள்ளனர். அந்த படம் தான் ரவிச்சந்திரன் – கே.ஆர்.விஜயா இணைந்து நடித்த முதல் படம் இதய கமலம்.
1965-ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.