தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம், நடிப்புக்கு இலக்கணம் என்று சொல்லப்படும் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் என்ற பட்டத்தை கொடுத்தது ஒரு பத்திரிக்கை என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் முக்கியமானவர் சிவாஜி கணேசன். 1952-ம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் கருணாநிதி வசனத்தில் வெளியான பராசக்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான சிவாஜி கணேசன், முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியதோடு, பலரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.
பராசக்தி படம் வெளியான சமயத்தில் சிவாஜி கணேசன் வரும் காலங்களில் பெரும் நட்சத்திரமாக உருவெடுப்பார் என்று பத்திரிக்கைகளில் எழுதியவர் சம்பத் குமார் என்ற ஆசிரியர். அந்த காலக்கட்டங்களில் சினிமா பத்திரக்கைகளில் முன்னணியில் இருந்தது பேசும்படம் என்ற பத்திரிக்கை. ஒவ்வொரு மாதமும் வெளியாகும் படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து, இம்மாத நட்சத்திரம் என்ற பெயரில் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் பராசக்தி படம் வெளியானபோது இம்மாத நடச்த்திரம் என்று சிவாஜியை குறிப்பிட்ட சம்பத்குமார், சிவாஜி வரும் காலத்தில் பெரிய நட்சத்திரமாக உருவெடுப்பார் என்று எழுதியிருந்தார். ஆனால் பராசக்தி படத்தில் இருந்து சிவாஜியை எப்படியாவது பேட்டி எடுக்க வேண்டும் என்றும் யோசித்த சம்பத் குமாருக்கு ஒருவருடம் கழித்து 1953-ம் ஆண்டு தான் சிவாஜியை பேட்டி காண வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒரு நாள் பேசும் படம் பத்திரிக்கையில் இரு வாசகர்கள், அந்த பத்திரிக்கையின் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருதனர். அதில், சிவாஜி கணேசன் படத்திற்கு படம் சிறப்பாக நடித்து வருகிறார். அவருக்கு நடிகர் திலகம் என்ற பட்டம் வழங்கி பேசும் படம் விழா எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மேலும் அதற்காக எங்களால் முடிந்த சிறு தொகையை வழங்குகிறோம் என்று கூறி குறிப்பிட்ட பணத்தை அனுப்பி இருந்தனர்.
இதை பார்த்த சம்பத் குமார் இனி எங்கள் பத்திரிக்கையில் வெளியாகும் அனைத்து கட்டுரைகளிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று தான் வரும் என்று உறுதி அளித்துள்ளார் சம்பத்குமார். நீங்கள் விழாவுக்கு அனுப்பி பணத்தை திரும்ப அனுப்புகிறோம் என்றும் கூறியிருந்தார். அன்று முதல் சிவாஜி கணேசன் நடிகர் திலகம் என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்டார். அம்பிகாபதி என்ற படம் தான் நடிகர் திலகம் என்ற பட்டத்துடன் வந்த முதல் படமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“