க்ளாசிக் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் சிவாஜி கணேசன். திரைப்படங்களில் தான் பேசும் வசனங்களில் மட்டுமல்லாமல் உடல் மொழியிலும் வித்தியாசத்தை வெளிப்படுத்திய சிவாஜி நடிகர் திகலம் என்று அழைக்கப்பட்டார். அவரை நடிப்பைதான் இன்றைய நடிகர்கள் பலரும் ஃபாலே செய்து வருகின்றனர்.
அந்த அளவிற்கு ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வித்தியாசத்தை காண்பித்து ரசிகர்களை மட்டுமல்லாமல் படக்குழுவினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிவாஜி நடிப்பில், 1968-ம் ஆண்டு வெளியான படம் தான் தில்லானா மோகனாம்பாள். சிவாஜி கணேசன், பத்மினி, பாலையா, நாகேஷ், உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கியிருந்தார்.
கே.வி.மகாதேவன் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற நலந்தானா என்ற பாடல் இன்றும் பல படங்களில் நாயகன் நாயகி நலம் விசாரிப்பது போன்ற காட்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிவாஜியின் நடிப்பு வழக்கம்போல் இந்த படத்திலும் அசத்தலாக இருந்ததது என்றும் கூறும் அளவுக்கு நாதஸ்வர கலைஞராக வாழ்ந்திருந்தார்.
அதேபோல் தில்லானா மோகனாம்பாள்'' படத்தில் இடம்பெற்ற நாதஸ்வர காட்சிகள் அனைத்துமே பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றது. இதில் திரையில் சிவாஜியும் அவரது குழுவினரும் தான் இதை இசையமைத்தாக ரசிகர்களுக்கு தெரிந்திருந்தாலும், உண்மையாக நாதஸ்வரம் வாசித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான்களான எம்.பி. என்.சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் தான். அவர்களில் இளையவரான பொன்னுசாமியை சந்தித்தபோது எடுத்த பேட்டி குறித்து மறையாத பழைய பாடல்கள் என்ற ஃபேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ''தில்லானா மோகனாம்பாள் ' படத்திற்கு நாங்கள் தான் நாதஸ்வரம் வாசிக்கப் போகிறோம் என்று முடிவானதும் ஒன்றைத் தீர்மானமாகச் சொன்னார். ''நாதஸ்வர இசை ரிக்கார்டிங் நான் இல்லாம நடக்கக் கூடாது'' என்று சொல்லிவிட்டு கே.வி.மகாதேவன் குழுவோடு ரிக்கார்டிங் நடக்கும்போது கூடவே இருப்பார் சிவாஜி. நாதஸ்வரத்தை நாங்கள் வாசிக்கிறபோது எங்களுடைய முகபாவங்கள், அழுத்தம் கொடுக்கிற விரலசைவு, நாதஸ்வரத்தை நாங்கள் தாங்கிப் பிடிக்கிற போக்கு இவற்றையெல்லாம் நுணுக்கமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். படத்தைப் பிறகு பார்த்தபோது தான் அவருடைய கவனிப்பின் அர்த்தம் புரிந்தது.
சென்னையில் இருபது நாட்களுக்கு மேல் ரிகர்சல் நடந்தது. ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் ரிக்கார்டிங். நகுமோ, தில்லானா, ஆயிரம் கண் போதாது, நலந்தானா என்று பலவற்றை எடுத்திருந்தோம். ஒரு சமயம் ரிகர்சல் ஒரு பக்கம் நாங்கள். இன்னொரு புறம் சிவாஜி, ஏ.வி.எம். ராஜன், பாலையா, சாரங்கபாணி குழுவினர். நாங்கள் வாசிக்க எதிரே அவர்கள் வாசிக்கிற மாதிரி அபிநயிக்க வேண்டும். ''எப்படி இருக்கு?'' என்று எங்களிடம் கேட்டார் சிவாஜி.
'' நீங்க தான் ஒரிஜினல். வாசித்த நாங்கள் நகல்ன்னு சொல்ற அளவுக்கு நீங்க நடிச்சிட்டீங்க'' என்று நாங்கள் சொன்னதும் சிவாஜிக்கு மகிழ்ச்சி. பிளாட்டிங் பேப்பர் மாதிரி எங்களுடைய முகபாவங்களைப் பார்வையிலேயே உறிஞ்சிவிடுவார். நாதஸ்வரத்தை அழுத்தி வாசிக்கும்போது கழுத்து நரம்பு புடைப்பதைக் கூட அழகாகப் பண்ணியிருப்பார். பாலையா அண்ணன் எங்கள் குழுவில் இருந்த தவில்காரரிடம் வாசிக்கவே கற்றுக் கொண்டு தவிலை எங்களுக்கு வாசித்தே காண்பித்தார். படத்திலும் அமர்க்களப்படுத்திவிட்டார். அவ்வளவு அற்புதமான கலைஞர்கள்!'' என்று கூறியதாக பதிவிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“