எம்.எஸ்.வி இசையில் டி.எம்.எஸ்.அற்புதமாக பாடிய ஒரு பாடலை கேட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அன்று நடக்க இருந்த படப்பிடிப்பை ஒரு வாரம் தள்ளி வைத்து அதன்பிறகு நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் சிவாஜி கணேசன், நடிப்பில் பல பரினாமங்களை கொடுத்திருந்தாலும் ஒரு காட்சியில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்றால், ஒரு அறிமுக நடிகரைப்போல் அந்த படப்பிடிப்புக்கு முந்தைய நாள் நன்றாக பயிற்சி எடுத்துக்கொள்வார் என்று அவரை பற்றி தெரிந்த பல பிரபலங்கள் சொல்ல கேட்டிருப்போம்.
தனக்கு தெரிந்தை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவும், தனக்கு தெரியாத்தை மற்றவர்களிடம் இருந்து தெரிந்துகொள்ளவும் அதிக முயற்சி செய்யும், சிவாஜி கணேசன் மற்றவர்கள் திறமையை பாராட்டவும் தவறியதில்லை. அந்த வகையில் ஒரு பாடலுக்கு சிறப்பாக இசையமைத்த எம்.எஸ்.வி, அந்த பாடலை சிறப்பாக பாடி அந்த இசைக்கு உயிர்கொடுத்த டி.எம்.எஸ். ஆகியோரின் திறமையை கண்டு வியந்த சிவாஜி கணேசன் படப்பிடிப்பை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.
1965-ம் ஆண்டு ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் சாந்தி. சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, தேவிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.வி – ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்திருந்த நிலையில், கவியரசர் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார். இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் பி.சுசீலா டி.எம்.எஸ். பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் பாடியிருந்தனர்.
இந்த படத்தில் வரும் ‘’யார் அந்த நிலவு’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த பாடலை கேட்ட சிவாஜி கணேசன் அன்று நடக்க இருந்த ஷூட்டிங்கை ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளார். எம்.எஸ்.வி அற்புதமாக இசையமைத்துள்ளார். டி.எம்.எஸ்.மிக அற்புதமாக பாடியுள்ளார். இது எனக்கு ஒரு சவால் இதற்கு ஏற்ப நான் நடிக்க வேண்டும் என்றால் எனக்கு கால அவகாசம் வேண்டும் என்று சொல்லி ஒரு வாரம் கழித்து படப்பிடிப்பை வைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.