சிவாஜி நடிப்பில் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான பேசும் தெய்வம் படத்தின் படப்பிடிப்பு நிதி பிரச்சனை காரணமாக நின்று போன நிலையில், அதற்கு கேட்காமலே உதவி செய்து படத்தை முடிக்க செய்துள்ளார் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன்.
தமிழ் சினிமாவின் இயக்குனர் திலகம் என்று போற்றப்படும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான படம் பேசும் தெய்வம். பத்மினி, சவுக்கார் ஜானகி, நாகேஷ், எஸ்.வி.ரங்காராவ், வி.எஸ்.ராகவன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இந்த படத்திற்கு, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார். வாலி அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்.
இந்த படம் படப்பிடிப்பு நடந்தபோது, நிதி பிரச்சனையின் காரணமாக படப்பிடிப்பு நின்றுபோன நிலையில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்’ இயக்குனரும் தயாரிப்பாளருமான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தவித்துக்கொண்டிருந்தார். அப்போது ஜெமினி அதிபரான எஸ்.எஸ்.வாசன் உதவி செய்ய முன்வந்துள்ளதாக கே.எஸ்.கோபால கிருஷ்ணனின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதற்கு முன்பு எஸ்.எஸ்.வாசனை கே.எஸ்.கோபால கிருஷ்ணன் பார்த்ததே இல்லை.
ஆனாலும் பணத்தேவை காரணமாக மறுநாள் அவரை போய் சந்தித்துள்ளார். கே.எஸ்.கோபால கிருஷ்ணனை மகிழ்ச்சியுடன் வரவேற்று நலம் விசாரித்த எஸ்.எஸ்.வாசன் பேசும் தெய்வம் படத்தை முடிக்க உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு கே.எஸ்.கோபால கிருஷ்ணன் 2 லட்சம் என்று சொல்ல, உடனடியாக எஸ்.எஸ்.வாசன், தனது மேனேஜரை அழைத்து இவர்களுக்கு 2 லட்சம் பணம் கொடு என்று சொல்ல, அவரும் 2 லட்சத்திற்காக செக்கை கொடுத்துள்ளார்.
தான் யார் என்றே தெரியாத ஒருவர் தனக்கு ஏன் உதவி செய்ய வேண்டும் என்று கே.எஸ்.கோபால கிருஷ்ணன் நினைத்துக்கொண்டிருக்க, நான் கஷ்டப்படும்போது எனக்கு ஒருவர் உதவி செய்தார். அவருக்கு கைமாறு செய்ய வேண்டி தான் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று எஸ்.எஸ்.வாசன் பதில் அளித்துள்ளார். 1948-ம் ஆண்டு வெளியாக சந்திரலேகா படத்தை இயக்கி தயாரித்தவர் எஸ்.எஸ்.வாசன். இந்த படம் ஒரு கட்டத்தில் நிதி பிரச்சனை காரணமாக நின்றுபோனது. எஸ்.எஸ்.வாசன் தனது சொத்துக்களை அடமானம் வைத்து படப்பிடிப்பை நடத்தியும் பணம் போதவில்லை. இதனால் 30 லட்சத்திற்கு மேல் கடனாகியுள்ளார். அப்போது தி இந்து பத்திரிக்கை அதிபர் ஸ்ரீனிவாச அய்யங்கார் எஸ்.எஸ்.வாசனை அழைத்துள்ளார்.
கடன்காரர்கள் அவரிடம் சென்றுவிட்டார்களே என்று நினைத்து எஸ்.எஸ்.வாசன் தனக்கு உடல்நிலை சரியில்லை 2 நாட்கள் கழித்து வருகிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ஸ்ரீனிவாசன அய்யங்கார் நானே அங்கு வருகிறேன் என்று சொல்ல, அதை கேட்டு, எஸ்.எஸ்.வாசனே அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். இங்கு சந்திரலேகா படத்திற்காக கடனாளியாகிவிட்டாயா என்று கேட்க, எஸ்.எஸ்.வாசன் ஆமாம் என்று கூறியுள்ளார்.
மேலும் 30 லட்சம் கடன், இதை விட இதற்கான வட்டி தான் பெரிதாக இருக்கிறது என்று சொல்ல, வட்டி இல்லாமல் கடன் கிடைத்தால் போதுமா படத்தை முடித்துவிடுவாயா என்று கேட்க, கண்டிப்பாக முடித்துவிடுவேன் உற்சாகமாக வேலை செய்வேன் என்று எஸ்.எஸ்.வாசன் சொல்ல, உடனடியாக 30 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். படம் வெளியாகும்போது இந்த பணத்தை கொடுத்தால் போதும். இதற்கு நீ ஒரு பைசா கூட வட்டி கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
நீ நல்லவன் திறமைசாளி, வாக்கு தவறாதவன் அதனால் தான் உன்னை நம்பி பணம் கொடுத்திருக்கிறேன். இதற்காக நீ எனக்கு ஒரு கைமாறு செய்ய வேண்டும் என்று சொன்ன ஸ்ரீனிவாச அய்யங்கார், உன்னை போல் ஒரு திறமைசாளி, இந்த மாதிரி ஒரு கஷ்டத்தில் சிக்கி தவிக்கும்போது உதவி செய். அதுதான் நீ எனக்கு செய்யும் கைமாறு என்று கூறியுள்ளார். இதன் காரணமாகத்தான் திறமைசாளியாக கே.எஸ்.கோபால கிருஷ்ணனுக்கு எஸ்.எஸ்.வாசன் உதவி செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“