தமிழ் சினிமாவில், மிகச்சிறந்த பாடகர் என்று பெயரேடுத்து டி.எம்.சௌந்திரராஜன், பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். தான் பாடிய பாடல்களை மேடை கச்சேரிகளில் பாடும் வழக்கத்தையும் வைத்திருந்த அவர், ஒரு பாடலை மட்டும் ரெக்கார்டிங்காக பாடி முடித்தபின் வேறு எங்கும் பாடவே இல்லை. அந்த பாடல் எது? எந்த படத்தில் இடம்பெற்றது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
க்ளாசிக் சினிமாவில் எம.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு தனது குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த டி.எம்.சௌந்திரராஜன் தனது மூத்த மகன் மருத்துவமனையில் உயிருக்கு பேராடியபோது, அவரின் அருகிலேயே இருந்து கண்ணீர் விட்டு அழுதபடி இருந்துள்ளார். அப்போது பாகபிரிவினை என்ற படத்திற்காக அவரை பாடல் பாட அழைக்கிறார்கள். ஏற்கனவே ஒப்புக்கொண்ட பாடல் என்பதால் துக்கத்திலும் டி.எம்.எஸ் பாட செல்கிறார்.
1959-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான படம் பாகபிரிவினை. சிவாஜி கணேசன், சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, நம்பியார், பாலையா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.வி – ராமமூர்த்தி இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக இதில் ஏன் பிறந்தாய் மகனே என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் 4 பாடல்களை பாடிய டி.எம்.எஸ் இந்த பாடலையும் அவரே பாடியிருந்தார். மகன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில், ஏன் பிறந்தாய் மகனே என்று அவருக்கு கொடுத்த பாடலால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனாலும் இசையமைப்பாளர்களிடம் மெட்டை கேட்ட டி.எம்.எஸ் அவர்களிடம் பாடலை ஒருமுறை பாடி காட்டியுள்ளார். வழக்கமாக 2 முறை ஒத்திகை பார்த்துவிட்டு தான் டிஎம்எஸ் ரெக்கார்டிங் போவார்.
ஆனால் இந்த பாடலை பாடும்போது, ஒரு முறை மட்டும் பாடலை பாடி காட்டிவிட்டு, உடனடியாக ரெக்கார்டிங் சென்று ஒரு டேக்கில் பாடலை பாடி முடித்துள்ளார்.
பாடி முடித்துவிட்டு அவசர அவசரமாக மருத்துவமனை சென்று பார்த்த டி.எம்.எஸ்-க்கு அவரது மகன் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி வருகிறது. இதை கேட்டு மிகவும் வேதனையடைந்த டி.எம்.எஸ், அதன்பிறகு ஏன் பிறந்தாய் மகனே என்ற பாடலை எந்த மேடையிலும் பாடவே இல்லை. அதேபோல் இந்த பாடல் ரேடியோவில் ஓடினாலும் அதை ஆஃப் செய்துவிடுவராம்.
ஒரு வருடம் கழித்து படுக்கையில் இருந்த தனது அம்மாவின் ஆசையை நிறைவேற்ற கவிஞர் வாலி, டி.எம்.எஸை அழைத்துக்கொண்டு தனது அம்மாவை பார்க்க சென்றுள்ளார். அப்போது அவர் வற்புறுத்தி கேட்க, மனதை கல்லாக்கிக்கொண்டு ஏன் பிறந்தாய் மகனே என்ற பாடலை மீண்டும் ஒருமுறை பாடியுள்ளார். அத்துடன் வேறு எங்கும் டி.எம்.எஸ் பாடவேயில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“