எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி இளம் நடிகர்களுக்கும் தனது வரிகள் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள கவிஞர் வாலி, ஒரே வரியை 3 வெவ்வேறு பாடல்களுக்கு பயன்படுத்தியுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர்.
இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். அதேபோல் ஒரு கலக்கட்டத்தில் கண்ணதாசன் எழுத வேண்டிய ஒரு பாடல் கவிஞர் வாலிக்கு வந்தது அனைவரும் அறிந்த ஒரு தகவல். அதே சமயம் வாலி தொடக்கத்தில் சாப்பாட்டுக்கே வழியில் இல்லாமல் இருந்ததும், எம்.எஸ்.வியை சந்தித்த பிறகு சாப்பிடுவதற்கே நேரமில்லை என்று அவரே கூறியுள்ளார்.
அதேபோல் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களும் கேட்டு ரசிக்க கூடிய வகையில் பாடல்களை கொடுத்துள்ள கவிஞர் வாலி, காதலர்கள் பாடிக்கொள்வது போல் வரும் 3 வெவ்வேறு பாடல்களுக்கு ஒரே வரியை பயன்படுத்தி பாடல்கள் எழுதியிருப்பார். இதில் முதல் படம் சத்யா. கமல்ஹாசன் –அமலா நடிப்பில் 1988-ம் வெளியான வெளியான இந்த படம் இன்றைய ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘’வலையோசை கலகலவென’’ என்ற பாடல் காதலர்களுக்கு பிடித்தமான பாடலாக இன்றும் நிலைத்திருக்கிறது. இந்த பாடலில், ‘’உன்னை காணாதுருகும் நொடி நேரம்... பல மாதம் வருடம் என மாறும்’’ என்ற வரிகளை மற்ற 2 வெவ்வேறு பாடல்களில் வாலி எழுதியிருப்பார்.
1991-ம் ஆண்டு ரஜினிகாந்த் – ஷோபனா நடிப்பில் வெளியாள தளபதி படத்தில் வரும் ‘’சுந்தரி கண்ணால் ஒரு சேதி’’ என்ற பாடல் பெரிய ஹிட் பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடலில் வரும் ‘’மாதங்களும் வாரம் ஆகும் நீயும் நானும் கூடினால்... வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்’’ என்ற வரி சத்யா படததில் வரும் பாடலின் வரிகளை போலவே அமைந்திருக்கும்.
அதேபோல் 1996-ம் ஆண்டு வினத் – அப்பாஸ் – தபு நடிப்பில் வெளியான காதல் தேசம் படத்தில் ‘’என்னை காணவில்லையே நேற்றோடு’’ என்ற பாடலில், நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் நீ என்னை நீங்கி சென்றாலே... வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் வந்தாலே’’ என்ற வரிகள் சத்யா படத்தில் வரும் பாடலின் வரிகளை சார்ந்தே இருக்கும். இந்த 3 பாடல்களுமே காதலவர்கள் பாடும் பாடல் தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“