சினிமாவில் கண்ணதாசனுக்கு போட்டியாக வந்த வாலிக்கு பின்னாளில் கண்ணதாசனின் நெருங்கி நட்பு கிடைத்ததும், கண்ணதாசன் எழுதிய வேண்டிய ஒரு பாடலை வாலி எழுதி வெற்றி பெற்றதும் தமிழ் சினிமாவில் பலரும் அறிந்திடாத ஒரு தகவல்
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. எம.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். ஆனாலும் தொடக்கத்தில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
அந்த காலக்கட்டத்தில், வாலியின் நெருங்கிய நண்பரான கதாசிரியர் மாறா, எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சொல்ல, இவர் தான் இசையமைத்து வந்த இதயத்தில் நீ என்ற படத்தில் வாலிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதுதான் எம்.எஸ்.வி வாலி இருவரும் இணைந்த முதல் படம். அதன்பிறகு தொடர்ந்து எம்.எஸ்.வி இசையில் பல பாடல்களை எழுதியுள்ள வாலி, எம்.ஜி.ஆர் படங்களுக்கு முக்கிய கவிஞராக இருந்தார்.
வாலிக்கு வாய்ப்புகள் கிடைத்ததை தொடர்ந்து கண்ணதாசன் – வாலி இருவரும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தனர். இந்த நேரத்தில் கண்ணதாசன் எழுத வேண்டிய பாடல் ஒன்றை வாலி எழுதியுள்ளார். 1967-ம் ஆண்டு புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான படம் நெஞ்சிருக்கும்வரை. வேலையில்லாத 3 இளைஞர்கள் மற்றும் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
சிவாஜி கணேசன், முத்துராமன், நாகேஷ் கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுத வேண்டி இருந்தது. 7 பாடல்கள் இடம்பெற்ற இந்த படத்தில் 6 பாடல்களை கண்ணதாசன் எழுதி முடித்துவிட்டார். படத்தின் முதல் பாடலை அவர் எழுத தயாராக இருந்தபோது, கண்ணதாசனின் உறவினர் கரைக்குடியில் இறந்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த கண்ணதாசன், நான் உடனடியாக ஊருக்கு செல்ல வேண்டும். மீதமிருக்கும் இந்த ஒரு பாடலை மட்டும் வாலிலை வைத்து எழுதிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அன்றைய தினம் பாடல் எழுதி, அடுத்த நாள் பதிவு செய்து படப்பிடிப்புக்கு அனுப்ப வேண்டும். ஏனென்றால், இந்த பாடல்காட்சியை முடித்துவிட்டு அடுத்த நாள் சிவாஜி அமெரிக்க செல்ல இருந்ததால், தன்னால் இந்த பாடலை எழுத முடியாத நிலையில், வாலியை எழுதுமாறு கூறியுள்ளார் கண்ணதாசன்.
அதேபோல் படத்தின் இயக்குனர் ஸ்ரீதரிடம் பேமெண்ட் கேட்க வேண்டாம் அவர் எழுதும் பாடலுக்கு நானே பணம் கொடுக்கிறேன் என்று கண்ணதாசன் கூறியதை தொடர்ந்து, மதிய நேரத்தில் இந்த தகவலை தெரிந்துகொண்ட வாலி, மதியம் 2.30 மணியளவில் சாரதா ஸ்டூடியோவுக்கு சென்று எம்.எஸ்.வியை சந்திக்கக, பீச்சில், 3 இளைஞர்கள் பாடுவது போன்ற உரு பாடல் என்று படத்தின் இயக்குனர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
அந்த சூழ்நிலையில் வாலி எழுதிய அந்த பாடல் தான், ‘’நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு’’ என்ற பாடல். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. இந்த தகவலை வாலியோ ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.