தமிழ் சினிமாவில் எவ்வித கிசுகிசுக்களிலும் சிக்கிக்கொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்ற எண்ணத்தில் பயணித்து வெற்றி கண்டவர்களில் முக்கியமானவர் நடிகர் சிவக்குமார். தற்போது நடிப்பில இருந்து விலகி தன் மனதுக்கு பிடித்த வேலையை செய்து வரும் சிவக்குமார் சினிமாவில் நடிப்பில் இருந்து ஏன் விலகினார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
1965-ம் ஆண்டு ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சிவக்குமார். அதனைத் தொடர்ந்து, திருமால் பெருமை, ராஜராஜசோழன், அன்பிள்ளை சிங்கம், பட்டிக்காட்டு ராஜா என பல படங்களில் நடித்திருந்த சிவக்குமார் இசையமைப்பாளர் இளையராஜா அறிமுகமான அன்னக்கிளி படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.
மேலும் இவர் நடிப்பில வெளியான ரோசாப்பூ ரவிக்கைகாரி, ஆட்டுக்கார அலமேலு, வண்டிச்சக்கரம், சிந்து பைரவி உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது. 1991-ம் ஆண்டு முதல் முக்கியத்துவம் வாய்ந்த குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய சிவக்குமார், அர்ஜூன், ராம்கி, கார்த்திக், விஜய், பிரபு உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தார்.
இதில் 90-களில் இறுதிக்கட்டத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தில் அவரது அண்ணனாக நடித்திருப்பார். இதன் பிறகு சின்னத்திரையில் என்டரி ஆன சிவக்குமார், சித்தி அண்ணாமலை உள்ளிட்ட சில தொடர்களில் நடித்திருந்தார். 2001-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் தான் சிவக்குமார் நடித்த கடைசி திரைப்படமாகும்.
சின்னத்திரையில் நடித்து வந்த சிவக்குமார் ஒருமுறை படப்பிடிப்பின்போது உணர்ச்சிப்பூர்வமான காட்சியில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அருகில் ஒரு துணை நடிகை போனில் கத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த சிவக்குமார் ஏம்மா இப்படி உணர்ச்சிப்பூர்வமா நடிச்சிட்டு இருக்கேன். இவ்வளவு சத்தமாக பேசலாமா என்று கேட்டுள்ளார். சிவக்குமாரின் பேச்சை கேட்ட அந்த பெண் ஏன் சார் இப்படி பண்றீங்க இத்தனை வருஷமா நடிச்சிட்டு இருக்கீங்க... எப்படியும்டப்பிங் பேச போறீங்க டப்பிங்ல பாத்தக்கங்க என்று சொல்லிவிட்டு தனது பேச்சை தொடர்ந்துள்ளார்.
அன்றைக்கு சினிமா எப்படி இருந்தது இன்றைக்கு இப்படி மாறிவிட்டதே இதற்கு பிறகும் நாம் நடிக்க வேண்டுமா என்று சிந்தித்த சிவக்குமார் இனி திரைப்படமானாலும் தொலைக்காட்சி தொடரானாலும் நடிப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டார் என்று இயக்குனரும் பத்திரிக்கையாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“