சக நடிகரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், அவரது உதவிக்காக எம்.ஜி.ஆர் அனுப்பிய பணத்தை அந்த நடிகர் வாங்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு என்ன காரணம் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில், அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில், துணை நடிகராக அறிமுகமாகி, பல தடைகளை கடந்து நாயகனாக மாறிய இவர், ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாரளாக இருந்தாலும், இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வலம் வந்தவர் எம்.ஜி.ஆர்.
அதேபோல் பல நடிகர்கள் மற்றும் பொது மக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகள் செய்த எம்.ஜி.ஆர், கஷ்டம் என்று யார் வந்தாலும், கர்ணனாக மாறி உதவி செய்துவிடுவார். தனது சக நடிகர்கள் கஷ்’டத்தில் இருக்கும்போது அவர்கள் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்று நோக்கத்துடன், அவர்களுக்கு தொடர்ந்து தனது படங்களில் வாய்ப்பு கொடுத்து அவர்களின் கஷ்டத்தை போக்கியவர் தான் எம்.ஜி.ஆர். அப்படி எம்.ஜி.ஆர் செய்த ஒரு உதவியை சக நடிகர் ஒருவர் ஏற்க மறுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் வி.எஸ்.ராகவன். எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாமல் பல நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர், கலகலப்பு படத்தில் விமலின் தாத்தாவாக நடித்திருப்பார். எனக்கு தெரிந்து திரைதுறையில் வள்ளல் என்றால் அது எம்.ஜி.ஆர் தான் என்று சொல்லும் வி.எஸ்.ராகவன், எம்.ஜி.ஆர் தனக்காக செய்த உதவியை ஏற்க மறுத்துள்ளார். அது ஏன் தெரியுமா?
ஒருமுறை வி.எஸ்.ராகவனின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அப்போது அவரின் மருத்துவ செலவுக்கான பணம் தேவைப்படும் நிலையில், ராகவன் பண நெருக்கடியில் இருந்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், உடனடியாக வி.எஸ்.ராகவனுக்கு உதவி செய்யும் வகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பியுள்ளார். எம்.ஜி.ஆரிடம் இருந்து பணம் வந்திருப்பதை அறிந்த வி.எஸ்.ராகவன் அந்த உதவியை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளார்.
வி.எஸ்.ராகவனின் இந்த செயலை பார்த்த எம்.ஜி.ஆர், அவரிடம் ஏன் உதவியை வாங்க மறுத்துவிட்டீர்கள் என்று கேட்க, நான் கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைத்துவிட்டது. அதனால் தான் இதை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இந்த பணம் உங்களிடம் இருந்தால் கஷ்டம் என்றுளு வருபவர்களுக்கு உதவிகள் கிடைக்கும். எனக்கு உதவி கிடைத்து விட்டதால் இந்த பணம் எனக்கு தேவைப்படவில்லை. அதனால் தான் திருப்பி அனுப்பிவிட்டேன். எனக்கு பணம் தேவை என்றால் நான் உங்களிடம் தான் வருவேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“