க்ளாசிக் தமிழ் சினிமாவில் தனது மெல்லிசையின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணியில் வந்த பாடலாக இருந்தாலும், எம்.எஸ்.விஸ்வநதன் தனியாக இசையமைத்த பாடலாக இருந்தாலும் அதில் தனது தனித்திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.
எம்.எஸ்.வி இசையமைத்தால் அந்த படத்தின் பாடல்கள் மட்டுமல்லாமல் படமும் பெரிய வெற்றியை பெறும் என்று பல தயாரிப்பாளர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கையை தனது இசையால் காப்பாற்றியவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் குருநாதரான சி.ஆர் சுப்புராமன் ஒரு கட்டத்தில் இறந்துவிடுகிறார். இதனால் அவர் இசையமைக்க ஒப்புக்கொண்ட படங்கள் பாதியில் நிற்கிறது.
அப்போது சி.ஆர் சுப்புராமை கமிட் செய்த பல தயாரிப்பாளர்கள் எம்.எஸ்.வியை தேடி சென்றபோது அவர், தான் மட்டுமல்ல ராமமூர்த்தியும் இணைந்து படங்களுக்கு இசையமைக்கிறோம் என்று பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். எம்.எஸ்.வி தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் என்றாலும் கூட அவரின் பூர்வீகம் கேரளா. இதன் காரணமாக மலையாள சினிமாவின் பிரபல இயக்குனரான ஈச்சப்பன் இயக்கிய தமிழ் படமாக ஜெனோவா படத்தில் எம்.எஸ்.வி இசையமைக்க ஒப்பந்தமானர்.
இந்த படத்தில் எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்துக்கொண்டிருந்தார். எம்.எஸ்.வி சுப்பையா நாயுடுவின் அலுவலகத்தில் உதவியாளராக இருந்தார் என்பது மட்டும் தான் எம்.ஜி.ஆருக்கு தெரியும். ஆனால் அவர் தான் தனது படத்திற்கு இசை என்று தெரிந்து அதிர்ச்சியான எம்.ஜி.ஆர், ஆபிஸ் பாயை கொண்டு வந்து இசையமைக்க சொல்கிறீர்கள். படத்தை கெடுத்துவிடாதீர்கள் என கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் வார்த்தைகளை கேட்டு கோபப்படாத படத்தின் இயக்குனர் ஒருமுறை அவரின் பாடல்களை கேளுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றிவிடலாம் என்று கூறியுள்ளார். அவரின் கருத்தை ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர் பாடல்களை கேட்டுள்ளார். அந்த பாடல்கள் அவருக்கு மிகவும் பிடித்து போக, தன்னையே மறந்து அந்த பாடலுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் இந்த ஜெனோவா படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதனை தவிர்த்து, எம்.எஸ்.ஞானமணி, டி.கே.கல்யாணம் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“