தமிழ் க்ளாசிக் சினிமாவில், நட்சத்திர ஜோடியாக இருந்த எம்.ஜி.ஆர் – சரோஜா தேவி இருவரும் இணைந்து பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு எம்.ஜி.ஆர் சரோஜா தேவியுடன் நடிப்பதை தவிர்த்துள்ளார் என்பது பலரும் அறிந்த தகவல். இந்த மோதல் உருவாக காரணம் என்ன தெரியுமா?
நாடக நடிகராக இருந்து தமிழ் சினிமாவில் துணை நடிகராக 1936-ம் ஆண்டு சதிலீலாவதி படத்தில் அறிமுகமான எம்.ஜி.ஆர் 11 வருட போராட்டத்திற்கு பிறகு, 1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தாலும், எம்.ஜி.ஆர் ஒரு நட்சத்தர ஹீரோவாக மாறிய படம் என்றால் 1951-ம் ஆண்டு வெளியான மர்மயோகி படம் தான்.
இதன் பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆர், ஒரு சில படங்களில் துணை நடிகையாக நடித்து வந்த சரோஜா தேவியை தனது திருடாதே படத்தில் நாயகியாக நடிக்க வைத்துள்ளார். இந்த படம் 1961-ம் ஆண்டு வெளியாகியுள்ளது. அதன்பிறகு எம்.ஜி.ஆர் சரோஜா தேவி இருவரும் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த நிலையில், எம்.ஜி.ஆர் இயக்கி தயாரித்து நடித்த நாடோடி மன்னன் படத்தில் நடிகை பானுமதியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் இறப்பது போல் காட்சி வைத்து, இடைவேளைக்கு பின் சரோஜா தேவி எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த மாதிரியான ஒரு சம்பவம் சரோஜா தேவி வாழ்க்கையிலும் நடந்துள்ளது. அதுவும் எம்.ஜி.ஆர் படம் தான். 1967-ம் ஆண்டு ஜனவரி 12-ந் தேதி எம்.ஜி.ஆரை அவரது வீட்டில் சந்தித்த எம்.ஆர்,ராதா திடீரென அவரை துப்பாக்கியால் சுட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் தீவிர சிகிச்சை பெற்று வந்தபோது, அவர் பிழைத்து வருவாரா மாட்டாரா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் சின்னப்ப தேவர் எம்.ஜி.ஆர் பிழைத்து வருவார் என்று உறுதியாக நம்பினார்.
மேலும், எம்.ஜி.ஆர் சிகிச்சையில் இருக்கும்போது அவரை சந்தித்த சின்னப்ப தேவர் மீண்டும் வாருங்கள் படம் பண்ணுவோம் என்று அட்வான்ஸ் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அதே சமயம், எம்.ஜி.ஆர் சுடப்பட்டபோது அவருடன் பல படங்களில் நடிக்க அக்ரிமெண்ட் போட்டிருந்த சரோஜா தேவி அடுத்து என்ன செய்வார் என்று அவரது அம்மாவிடம் கேட்டபோது, முதலில் எம்.ஜி.ஆர் குணமாகி வரட்டும் அதன்பிறகு அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதா? அவர் மீண்டும் நடிக்கிறாரா என்று பார்ப்போம் என கூறியுள்ளார்.
அதேபோல் சரோஜா தேவியிடம் கேட்டபோது, எனக்கு எம்.ஜி.ஆர் படங்களில் நடிப்பதை விட, சிவாஜி படங்களில் நடிப்பது தான் எனது நடிப்பு திறமை வெளிப்படுகிறது என்று கூறியுள்ளார். அதேபோல் எம்.ஜி.ஆருடன் நீதிக்கு பின் பாசம் என்ற படத்தில் நடித்து வந்த சரோஜா தேவி அந்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டு வராமல் வேறு படத்திற்கு சென்றுள்ளார். இது பற்றி கேட்டபோது உங்களுக்கு தேவை என்றால் வேறு நடிகை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனால் சின்னப்ப தேவர் அவர் மீது கோபமாக இருந்துள்ளார்.
இதன் காரணமாக எம்.ஜி.ஆர் நடிப்பில் அடுத்தடுத்து படம் தயாரித்த சின்னப்ப தேவர், இந்த படங்களில் ஜெயலலிதாவை நாயகியாக மாற்றியுள்ளார். இந்த படத்தில் சரோஜா தேவி இறந்துவிடுவது போல் காட்டிவிட்டு, எம்.ஜி.ஆரின் அத்தை மகள் ஜெயலலிதா என்று அவரை படத்தில் சேர்த்துவிடுகின்றனர். அதன்பிறகு எம்.ஜி.ஆர் சாரோஜா தேவி இணைந்து நடிக்கவே இல்லை. துப்பாக்கியால் சுடப்பட்ட எம்.ஜி.ஆர் மீண்டும் வந்து நடித்த அரசக்கட்டளை படம் எம்.ஜி.ஆருடன் சரோஜா தேவி நடித்த கடைசி படம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“