தமிழ் சினிமாவில் கவிப்பேரரசு என்று அழைக்கப்படும் வைரமுத்து யாரிடமும் உதவியாளராக இருக்கவில்லை என்றாலும், கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடலுக்கு மட்டும் உதவியாளராக இருந்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
Advertisment
80-90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞராக கொடிகட்டி பறந்தவர் தான் கவிப்பேரரசு வைரமுத்து. இன்றைக்கும் தனது வரிகள் மூலம் ஹிட் பாடல்களை கொடுக்கும் ஒரு கவிஞராக வலம் வரும் இவர், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், சங்கர் – கணேஷ், உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை எழுதியுள்ளார்.
1980-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் படத்தில் இடம்பெற்ற ‘’இது ஒரு பொன்மாலை பொழுது’’ பாடல் தான் வைரமுத்து திரைப்பத்தில் எழுதிய முதல் பாடல். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருந்த படத்திற்கு பல ஹிட் பாடல்களை எழுதியுள்ள வைரமுத்து கடைசியாக கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒட்ட என்ற படத்தில் இடம் பெற்ற ஒரு தமிழ் பாடலை எழுதியிருந்தார்.
மேலும் பல சின்னத்திரை சீரியல்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ள வைரமுத்து, ஒரு சில படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கவிஞராக இருந்து வரும் வைரமுத்து யாரிடமும் உதவியாளராக இல்லை என்றாலும், வாலி எழுதிய ஒரு பாடல் பதிவின்போது அவருக்கு உதவியாளராக செயல்பட்டுள்ளார். 1983-ம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியாக படம் தூங்காதே தம்பி தூங்காதே.
ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ராதா சுலோக்ஜனா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி எழுதியுள்ளார். இதனிடையே இந்த படத்தின் ஒரு பாடல் பதிவின்போது, இரவு 10 மணிக்கு ஏ.வி.எம் சரவணன், கவிஞர் வைரமுத்துவை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார்.
தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் பாடல் ஒலிப்பதிவு நடைபெறுகிறது. பாடலை பாட எஸ்.பி.பாலசுப்பிரமணியன் வந்துவிட்டார். ஆனால் கவிஞரும் இசையமைப்பாளரும் வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, அங்கு பாடல் பதிவில் சில சந்தேகங்கள் வருகின்றன. நீங்கள் அங்கு சென்று அந்த சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட வைரமுத்து உடனடியாக அங்கு சென்றுள்ளார்.
வைரமுத்துவை பார்த்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன், வாங்க வாங்க, பாடல் மிகவும் அருமையாக இருக்கிறது என்று சொல்ல, இந்த பாராட்டுக்கு சொந்தக்காரர் கவிஞர் வாலி தான். இந்த பாடலை எழுதியவர் அவர் தான் என்று கூறியுள்ளார். அதன்பிறகு அந்த பாடல் எப்படி பதிவு செய்யப்பட வேண்டும் என்று வைரமுத்து கூறியுள்ளார். அப்போது பதிவான அந்த பாடல் தான் நானாக நானில்லை தாயே என்ற பாடல். தாயை போற்றும் வகையில் அமைந்த இந்த பாடல் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“