தமிழ் சினிமாவின் புதுமை இயக்குனர் ஸ்ரீதர். எதிர்பாராதது படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான, இவர் அடுத்து, தனது நண்பர்களுடன் இணநை்து வீனஸ் பிச்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கினார். ஒரு ரூபாய் கூட முதலீடு இல்லாமல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் முதல் படமாக அமர தீபம் தயாரானர். சிவாஜி, பத்மினி, சாவித்ரி ஆகிய மூவரும் முன்பணம் வாங்காமல் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
இதன் பிறகு பிரம்மாண்ட படம் தயாரிக்க வேண்டும் என்று எண்ணிய ஸ்ரீதர் மற்றும் அவரது நண்பர்கள் ஸ்ரீவள்ளி நாடகத்தை படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். இதில் வள்ளியாக வைஜெயந்தி மாலா, முருகனாக சிவாஜி கணேசன், நாரதராக டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோர் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து சிவாஜியை சந்தித்துள்ளனர். அவரிடம் ஸ்ரீவள்ளியை படமாக எடுக்க இருக்கிறோம். முருகன் வேடத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதை கேட்ட சிவாஜி, சிரித்தபடியே இப்போது தான் ஒரு நிறுவனம் ஸ்ரீவள்ளி படம் எடுக்க போவதாகவும், அதில் நான் தான் முருகன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று முன்பணம் கொடுத்துவிட்டு சென்றதையும் சிவாஜி கூறியிருக்கிறார். மேலும் நீங்கள் வைஜெயந்தி மாலாவை வள்ளி கேரக்டரில் நடிக்க முடிவு செய்தீர்கள் அவர்கள் பத்மினியை முடிவு செய்திருக்கிறார். நாதர் டி.ஆர்,மகாலிங்கம் தான்’ என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட ஸ்ரீதர் ஏமாற்றத்துடன் திரும்பிய நிலையில், பாதி வழியில் வரும்போது தி மேன் வித் அயன் மாஸ்க் என்ற படத்தை தமிழில் எடுக்கலாம் என்று ஸ்ரீதருக்கு யோசனை தோன்றியது. இதை தனது நண்பர்களிடம் சொல்ல, அதை தான் மாடர்ன் தியேட்டர்ஸ் உத்தம புத்திரன் என்று எடுத்துவிட்டார்களே என்று கூறியுள்ளனர். எடுத்தால் என்ன, அந்த படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிறது. இப்போது சில மாற்றங்கள் செய்து நாம் எடுப்பேம் என்று ஸ்ரீதர் சொல்ல, மற்றவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு உடனடியாக மீண்டும் சிவாஜி வீட்டுக்கு சென்று உத்தமபுத்திரன் படத்தை மீண்டும் எடுக்கிறோம் நீங்கள் இரட்டை வேடத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்ல, சிவாஜியும் உடனடியாக ஒப்புக்கொண்டார். அதன்பிறகு இந்த படத்தை இயக்க ராம்நாத் என்ற இயக்குனரை சந்தித்தபோது, இப்போது தான் அந்த படத்தை எடுக்க ஒரு நிறுவனம் எனக்கு அட்வான்ஸ் கொடுத்தவிட்டு சென்றுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். இதனால் ஸ்ரீதர் மேலும் அதிர்ச்சியாகிறார்.
ஆனாலும் தங்களது படத்தில் சிவாஜி நடிக்கிறார் என்றால் ராம்நாத் ஓகே சொல்லிவிடுவார் என்ற எண்ணத்தில், ஸ்ரீதர் இந்த படத்தில் சிவாஜி நடிக்கிறார் என்று சொல்ல, ராம்நாத் இந்த படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கிறார் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான ஸ்ரீதர் ஏமாற்றத்துடன் திரும்பினாலும், அவர்களும் எடுக்கட்டும் நாமும் எடுப்போம். எந்த படமத் நன்றாக இருக்கிறது என்று மக்கள் முடிவு செய்யட்டும். படத்திற்கான திரைக்கதை எல்லாம் எழுதியாச்சு என்று ஸ்ரீதர் சொல்ல மற்றவர்களும் ஓகே. சொல்லி மறுநாள் விளம்பரம் கொடுத்துள்ளனர்.
சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன் என்று விளம்பரம் செய்தித்தாளில் வந்த அதே நாள் மற்றொரு பக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கும் உத்தமபுத்திரன் என்ற விளம்பரமும் வந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், என்.எஸ்.கிருஷ்ணன் எம்.ஜி.ஆரை தொடர்புகொண்டு அந்த படத்தின் உரிமையை அவர்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள். நீ வேறு கதை எடு, எதற்காக இப்படி பிரச்சனை பண்ண வேண்டும் என்று சொல்ல, எம்.ஜி.ஆர் இந்த படத்தை கைவிட்டுள்ளார். அதன்பிறகு சிவாஜி நடிப்பில் உத்தமபுத்திரன் படம் வெளியானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“