கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், சாம்பியன் பட்டம் வென்ற அருணா தமிழை கொன்று பட்டம் பெற்றதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானர் ஜேம்ஸ் வசந்தன். விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள இவர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இசை குறித்து அவ்வப்போது பல பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.
இதில் குறிப்பாக பாடகர்கள் பாடும் பாட்டு, இசையமைப்பாளர்களின் இசை குறித்து தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் ஜேம்ஸ் வசந்தன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பட்டம் வென்ற பாடகி அருணா தமிழை கொன்று பட்டம் வென்றுள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து ஜெம்ஸ் வசந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சூப்பர் சிங்கர் வெற்றியாளர் இவர்தான் பாருங்கள் என ஒருவர் யூ-டியூப் இணைப்பு ஒன்று அனுப்பினார். 'அருணா சிவயா' என்பவர் பாடிய காணொலி அது. அவர்தான் பட்டம் வென்றவர் என்பதையும் தெரிந்துகொண்டேன்.
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம் - எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்
என்கிற 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் இடம்பெற்ற பெரும்புலவன் பாரதியின் பாடலைப் பாடினார். அருமையாகப் பாடினார். இயல்பானத் திறமை கொண்டவர். சங்கீதம் படித்தவரா என்பதெல்லாம் தெரியாது.
ஆனால் நல்ல இயற்கை ஞானம் உள்ளவர் என்பது தெள்ளத்தெளிவாய் தெரிந்தது. ஆனால், தமிழைக் கொன்று பட்டம் வென்றுள்ளார் என்பது தெரிந்து வேதனையாக இருந்தது. இன்னும் எத்தனைக் காலந்தான் "நாட்டுப்புறப் பாடகர்கள் கொச்சையாகத்தான் பாடுவார்கள்' என்று விட்டுக்கொண்டிருக்க முடியும்? அவர்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடும்போது அது இயல்பான இசை என சொல்லி அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் அவற்றைக் கடக்கிறோம்.
இவர் திரைப்படப் பாடல்களைப் பாட முன்வந்திருக்கிறார். அதுவும் ஒரு போட்டித் தளத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தப் பாடல்களிலுள்ள இசை நுணுக்கங்களை அட்சரம் பிசகாமல் பாடக் கற்றுக்கொள்பவருக்கு அவருடைய மொழியின் நுணுக்கம் மட்டும் தெரியாதாமாம். நாமும் அதைக் கண்டுகொள்ளக் கூடாதாம். என்ன பெரிய நுணுக்கம்?
ல, ள, ழ வை வேறு எப்படி உச்சரிக்க முடியும்? உச்சரிக்க வரவில்லையென்றால் பொதுமேடைக்கு வராதீர்கள். கற்றுக்கொண்டு பிறகு வாருங்கள். வாய்ப்பாட்டு இசை என்பது இசையும் மொழியும் இரண்டறக் கலந்தது. சொற்கள் இல்லாமல் பாடல் இல்லை. அப்படியிருக்க, இசையால் மயக்கி, செவிகளை ஏமாற்றி, நம் மொழியைக் கொன்றுதான் நீங்கள் வெல்லவேண்டுமா?
பாடகர் இப்படியென்றால் அங்கு உட்கார்ந்து தலையாட்டிப் பொம்மை போல ரசித்துக்கொண்டிருந்த மொழிசெவிட்டு நடுவர்கள்தான் பெரிய குற்றவாளிகள். அங்கிருந்த ஒரு நட்சத்திர நடுவர் கூட இவர் செய்த பிழைகளைச் சுட்டிக்காட்டவில்லை. மொழி தெரிந்தால்தானே பிழை தெரியும்!
இது வேறு எந்த மாநிலத்திலும் நடக்க வாய்ப்பில்லை. இதே சூப்பர் சிங்கர் பாடகர் சிலர் ஹிந்தி நிகழ்ச்சிகளில் சென்று பங்கெடுத்தபோது பிசகின்றி அவர்கள் மொழியைப் பாடியது பாராட்டுக்குரியது. ஆனால் தமிழ் என்றால் நம் பாடகர்களுக்கு அவ்வளவு இளக்காரம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
பானை தயாரிக்கும் குடும்பத்தில் பிறந்த அருணா கோயில்களில் திருமுறை பாடி பயிற்சி பெற்று சூப்பர் சிங்கரில் பட்டம் வென்றுள்ள நிலையில், இவரது பாடலை கேட்பதை விட சாதி என்ன என்று கேட்டு பலர் காயப்படுத்தியதாக விஜய் டிவியிலேயே வெளிப்படையாக கூறியிருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”