தமிழ் சினிமாவில் காதல்கோட்டை என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்து முன்னணி இயக்குனராக பல வெற்றிப்படங்களை இயக்கியுளள் அகத்தியன், தனது அப்பாவின் காரியத்திற்கு பணம் இல்லாததால், தனது கதையை ரூ1500 இயக்குனர் மணிவண்ணனிடம் விற்றுவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு என்ன நடந்தது?
தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளவர் மணிவண்ணன். அனைத்து ஜானர்களிலும் படம் இயக்கிய ஒரே இயக்குனர் என்ற பெருமையை பெற்றுள்ள இவர், பல படங்களில் வில்லன், காமெடியன், குணச்சித்திரம் என நடிப்பிலும் தனி முத்திரை பதித்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான அமைதிப்படை என்ற படத்தை மிஞ்ச இன்னும் எந்த ஒரு அரசியல் படமும் வரவில்லை.
அதேபோல் அமைதிப்படை படத்திற்கு பின்பு வந்த அனைத்து அரசியல் படங்களும் அமைதிப்படை சாயல் இல்லாமல இருந்தது இல்லை என்று சொல்லும் அளவுக்கு, அந்த படத்தை ஒரு சிறப்பான அரசியல் படமாக கொடுத்து அதில் மணியன் என்ற கேரக்டரிலும் சிறப்பாக நடித்திருந்தவர் தான் மணிவண்ணன். இயக்குனர் அகத்தியன் சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் பல இயக்குனர்கள் தயாரிப்பு நிறுவனங்களிடம் தனது கதையை கொடுத்து வாய்ப்பு கேட்டுள்ளார்.
அந்த வகையில் இயக்குனர் மணிவண்ணனிடம் ஒரு கதையை கொடுத்திருந்த அகத்தியன், ஒருநாள், அவரது வீட்டுக்கு வந்து, சார் ரூ1500 பணம் வேண்டும். நான் உங்களிடம் ஒரு கதையை கொடுத்தேனே அதை இனிமேல் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். ரூ1500 பணம் மட்டும் கொடுங்கள். அப்பா இறந்துவிட்டார் அவரின் காரியத்திற்காக பணம் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார். இதை கேட்ட மணிவண்ணன், என்ன பேசுற நீ, ரூ1500-க்கு விற்கிற கதையா இது?
இப்போ என்ன உனக்கு ரூ1500 பணம் வேண்டும் அவ்வளவு தானே, பிடி, ஊருக்கு போய்ட்டு காரியத்தை முடித்துவிட்டு வா நாம படம் பண்ணலாம் என்று சொல்லி அகத்தியனை ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகு, அகத்தின், ஒரு சில படங்களை இயக்கிய நிலையில்,? மணிவண்ணனும் நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஒரு சில வருடங்கள் கழித்து சந்திக்கும்போது, சார் அந்த ரூ1500 பாக்கி இருக்கிறதே என்று சொன்னபோது, அதை பற்றி பேசாதே.
இப்போது நீ இயக்குனராகி எனக்கு எத்தனை படங்களில் வாய்ப்பு கொடுத்திருக்கிறாய். அதை வைத்து நான் முக்கால் கோடி சம்பாதித்துவிட்டேன். அதனால் இந்த ரூ1500 நீ எனக்கு கொடுத்தாகத்தான் அர்த்தம் என்று மணிவண்ணன் கூறியுள்ளார். அகத்தியனின் காதல்கோட்டை படத்தில் நடித்த மணிவண்ணன், அந்த படத்தின் திரைக்கதையில் அவருக்கு உதவி செய்துள்ளதாக அகத்தியனே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“