சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் பாரதிராஜா மருத்துவமனை இயக்குனர் பாரதிராஜாவுக்கு சொந்தமானது என்று பலரும் நினைத்தக்கொண்டிருந்த நிலையில், இந்த மருத்துவமனை குறித்து பாரதிராஜாவே விளக்கம் அளித்த வீடியோ பதிவு ஒன்று டூரிங் சினிமா என்ற யூடியூப் சேனலில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று பெயரெடுத்தவர் பாரதிராஜா. 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய பாரதிராஜா, அடுத்து சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், கடலோர கவிதைகள், ஒரு கைதியின் டைரி, அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல படங்களை கொடுத்துள்ளார். அண்ணன் தங்கை பாசத்தை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே படம் இன்றும் ஒரு வித்தியாகமான படமாக போற்றப்பட்டு வருகிறது.
இயக்குனர் மட்டும் இல்லாமல் ஒரு நடிகராகவும் முத்திரை பதித்துள்ள பாரதிராஜா தற்போது பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றது. இதனிடையே சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் பாரதிராஜா மருத்துவமனை இயக்குனர் பாரதிராஜாவுக்கு சொந்தமானது என்று பலரும் நினைத்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் தற்போது இந்த மருத்துவமனை குறித்து உண்மை நிலவரத்தை பாரதிராஜா கூறியுள்ளார். 1986-ம் ஆண்டு சத்யராஜ் நாயகனாக அறிமுகமான படம் கடலோர கவிதைகள். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இந்த படத்தை வடுகநாதன் நடேசன் என்ற இருவர் தயாரித்திருந்தனர். இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான நடேன் அடிப்படையில் ஒரு மருத்துவர்.
தன்னை முதன் முதலாக தயாரிப்பாளராக அறிமுகப்படுத்திய பாரதிராஜாவை நினைவுகூறும் வகையில், டாக்டர் நடேசன் அவரது மருத்துவமனைக்கு பாரதிராஜாவின் பெயரை வைத்துள்ளார். அவரும் நானும் நண்பர்கள் என்பது வேறு. அதே சமயம் அவர் என்மீது வைத்துள்ள அன்பு பாசம் மற்றும் மரியாதையால் எனது பெயரை இந்த மருத்துவமனைக்கு வைத்துள்ளார் என பாரதிராஜா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.