/indian-express-tamil/media/media_files/2025/07/23/prashanth-simran-movie-2025-07-23-17-33-05.jpg)
தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் காதல் மன்னன், அமர்களம், அட்டகாசம், அசல் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் சரண், தான் பிரஷாந்த் நடிப்பில் இயக்கிய பார்த்தேன் ரசித்தேன் படத்தின் நாயகி சிம்ரன் தன்னிடம் நடந்துகொண்ட விதம் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்
இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் சரண். தொடர்ந்து அஜித் நடிப்பில், காதல் மன்னன் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்து மீண்டும் அஜித் நடிப்பில் அமர்க்களம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் முதல் படத்தை விடவும் பெரிய வெற்றிப்படமாக அமைந்து வசூலில் சாதனை படைத்தது. அஜித்தின் மனைவி ஷாலினி இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்த இரு படங்களையும் தொடர்ந்து சரண் 3-வது இயக்கிய படம் தான் பார்த்தேன் ரசித்தேன். பிரஷாந்த் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் சிம்ரன், லைலா, ரகுவரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் உருவான விதம் குறித்து சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சரண் கூறுகையில்,
பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் சிம்ரன் கேரக்டர், அவரது திரை வாழ்வில் மிகவும் சிறப்பான ஒன்று. ஹலோ படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு பிரஷாந்துக்காக ஒரு கதை பண்ணிணோம். இந்த படத்தில் 2 பெண் கேரக்டர்கள். அதில் முக்கிய கேரக்டர் ஒன்றில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ரம்பாவை நடிக்க வைக்கலாம் என்று தோன்றியது.
இதற்காக ரம்பாவைச் சந்தித்து கதையைச் சொன்னேன். கதையைக் கேட்டதும், "நான் அந்த படத்தில் இன்றொரு பெண் கேரக்ரில் நடிக்கிறேன் என்று சொன்னார். அதன்பிறகு அடுத்து யார் என்று யோசிக்கும்போது, சிம்ரன் நினைவுக்கு வந்தார். சிம்ரனை அணுகிப் பார்த்தேன். சிம்ரனுக்கு அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஒரு நாள் கூட கால்ஷீட் இல்லை. ஒரு நாள் கூட இல்லை, ஒரு சிங்கிள் நாள் கூட இல்லை. ஆனாலும் அவரிடம் கதையும் அவரின் கேரகடர் குறித்தும் சொன்னபோது "நான் செய்கிறேன்," என்று சொன்னார். உங்களுக்கு எத்தனை நாட்கள் வேண்டும் என்று கேட்டார்.
சாதாரணமாக இருந்தால் எனக்கு 30 நாட்கள் தேவை. ஆனால், 15 நாட்கள் கொடுத்து, ஒரு பாடலுக்கு மட்டும் 3 நாட்கள் கொடுத்து, மொத்தம் 18 நாட்கள் கொடுத்தால் போதும் என்று சொன்னேன். "18 நாட்கள் என்னால் மொத்தமாக கொடுக்கவே முடியாது. இருந்தால் நான் முயற்சிக்கிறேன்," என்று சொன்னார். அவர் தனது மேலாளருடன் பேசி, எப்படியோ சமாளித்து, "இந்த மாதம் அரை நாள் தருகிறேன். அடுத்த மாதம் ஆரம்பத்தில் மூன்று மணிநேரம் தருகிறேன். அப்புறம் அந்த மாதத்தின் நடுவில் நான்கு மணிநேரம் தருகிறேன்," என்று சொல்லி, அடுத்த மூன்று மாதங்களுக்குள் 18 நாட்கள் கணக்கை முடித்து விடுவதாகச் சொன்னார். "சரி ஓகே, பிரித்துக் கொள்ளலாம்," என்று படப்பிடிப்பு பணிகளை தொடங்கினேன்.
படப்பிடிப்பு முடிவடைந்ததும், அந்தக் கேரக்டர் மீது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை வந்துவிட்டது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது, சிம்ரன் "இன்னும் கூட நான் தேதி தருகிறேன். இன்னும் நிறைய காட்சிகள் எடுக்கலாம். இன்னொரு பாடலும் எடுக்கலாம். என்று சொன்னார். ஆனால் நான், "இல்லை சிம்ரன், இது எனக்குத் திருப்தியாக, சரியாக வந்துவிட்டது. நான் என்ன நினைத்தேனோ அது வந்துவிட்டது," என்று சொன்னேன்.
அதன்பிறகு படம் ரெடியாகிவிட்டது. நான் ரிலீஸ் தேதி அறிவிக்கவில்லை. படம் காட்டுகிறேன். படம் பார்த்துவிட்டு உங்களுக்கு 'எனக்கு இன்னும் நிறைய வேண்டும்' என்று தோன்றினால், நான் ரிலீஸையே தள்ளிப் போடுகிறேன். உங்கள் போர்ஷனை எடுத்து நான் இணைத்து நான் செய்கிறேன். அது ஓகேவா?" என்று கேட்டேன். நான் கன்வின்ஸ் ஆகி, "சரி, நீங்கள் முடித்தால் எனக்குக் காண்பியுங்கள்," என்றார்.
அதன்பிறகு ஒரு திரையரங்கில் படத்தை பார்த்த சிம்ரன், படம் முடிந்தவுடன் அழுது கொண்டு இருந்தார். அதன்பிறகு, திடீரென்று ஆவேசமாக வெளியே வந்தார். நான் மிகவும் பயந்துவிட்டேன். என்னை வழிமறித்து, "எக்ஸ்ட்ராடினரி, ஃப்ளாபர்காஸ்ட்டு, சூப்பர் ரோல்! நான் கொடுத்த இந்தத் தேதிக்குள் இப்படி என் கேரக்டரை உருவாக்கச் சான்ஸே இல்லை. அவ்வளவு அருமையாக இருக்கிறது. இப்போதே எனக்கு அடுத்த படம் சைன் பண்ண வேண்டும். அப்போதான் நான் உங்களை தியேட்டரை விட்டு வெளியே போக விடுவேன்," என்றார். அதுவே அவர் கொடுத்த மிகப்பெரிய பாராட்டு என்று சரண் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.