தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகருமான சேரனின் தந்தை பாண்டியன் இன்று மரணமடைந்த நிலையில், அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்து 1997-ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். தொடர்ந்து வெற்றிக்கொடி கட்டு, பொற்காலம், பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களை இயக்கிய சேரன், கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ஆட்டோகிராஃப் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தவமாய் தவமிருந்து, மாய கண்ணாடி பொக்கிஷம் உள்ளிட்ட சில படங்களை இயக்கி நடித்த சேரன மற்ற இயக்குனர்களில் படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கிய சேரன், சமீபத்தில் வெளியான தமிழ்குடிமகன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது.
இதனிடையே சேரனின் தந்தை பாண்டியன் (84) இன்று தனது சொந்த கிராமத்தில் மரணமடைந்தார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே பழையூர் பட்டி என்ற கிராமத்தில் தியேட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றிய பாண்டியன் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்துள்ளார். தற்போது சேரன் தனது தந்தையின் இறுதிச்சடங்கிற்காக சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில், சேரனின் தந்தை மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“