சென்னையில் நடைபெற்ற இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் 'டி.என்.ஏ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பங்கேற்று பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் தனது பரியேறும் பெருமாள் படத்தின் கதையை முதலில் அதர்வாவிடம் தான் கூறியதாக தெரிவித்துள்ளார்.
அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ‘டி.என்.ஏ’ படத்தை இயக்குனர் நெல்சன் வெங்கடேன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ப்ரமோஷன் விழாவில், பங்கேற்று பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், அதர்வாவிற்கு இது நினைவிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. 'பரியேறும் பெருமாள்' படத்தின் கதையை நான் முதலில் சொன்ன ஹீரோ அதர்வாதான். 'பரதேசி' படத்தை பார்த்த பிறகு, 'பரியேறும் பெருமாள்' கதையை எழுதிவிட்டு, எந்த ஹீரோவை அணுகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் மனதில் தோன்றிய முதல் ஹீரோ அதர்வாதான்," என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "நான் முரளி சாரின் (அதர்வாவின் அப்பா) மிகப்பெரிய ரசிகன். அவர் ஒருதலைக் காதலை பல கதாபாத்திரங்களில் வெளிப்படுத்திய நடிகர். ஒருதலைக் காதல் என்பது பொதுவாக நிராகரிக்கப்பட்ட காதலாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அது அப்படியல்ல. ஒருதலைக் காதலில், காதலை வெளிப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. 'நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை, நான் உன்னை நேசிக்கிறேன்' என்பதே அதன் அர்த்தம்," என்று உணர்வுபூர்வமாகப் பேசினார்.
"அதர்வாவின் 'பாணா காத்தாடி' படம் வெளியான போதே, 'பரியேறும் பெருமாள்' படத்தின் கதாநாயகன் அதர்வா போலவே இருக்க வேண்டும் என்று நான் கற்பனை செய்தேன். அவரை சந்தித்து கதையை சொன்னேன். ஆனால், அவரது பிஸியான கால அட்டவணை காரணமாக இந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை. அதர்வா இந்த படத்தில் நடிக்கவில்லை என்ற செய்தி கிடைத்ததும், அன்று நான் மிகவும் வருத்தப்பட்டேன் என்பதை நீங்கள் நம்ப மாட்டீர்கள்," என்று மாரி செல்வராஜ் தனது மனநிலையை வெளிப்படுத்தினார்.
மாரி செல்வராஜ் மேலும் கூறுகையில், "அதர்வா இல்லையென்றால், இந்த படத்தை யாரை வைத்து செய்வது என்று நான் யோசித்துக் கொண்டே இருந்தேன். 'பரியேறும் பெருமாள்' அதர்வாவுடன் தான் உருவாகும் என்று என் மனைவியிடம் கூட சொல்லியிருந்தேன். அது நடக்கவில்லை. ஆனால் ஒரு நாள், இதை நான் சொல்வேன் என்று எனக்கு தெரியும். சுமார் ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இத்தனை வருடங்களாக நான் அவரை கவனித்து வருகிறேன், அதர்வா இன்னும் உயர்ந்து செல்வார். அவருக்கு திறமையும், வேகமும், திறனும் உள்ளன. 'டி.என்.ஏ' அவருக்கு ஒரு முக்கியமான படமாக அமையும்," என்று அதர்வாவை பாராட்டினார்.
'டி.என்.ஏ' படத்தில் அதர்வா முரளி மற்றும் நிமிஷா சஜயன் தவிர, பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா கேபி, சுப்ரமணியம் சிவா, கருணாகரன் மற்றும் பசங்க சிவகுமார் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.