நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் இருந்து இயக்குனர் ரத்னகுமார் விலகியுள்ள நிலையில், இந்த படம் ரூ1000 கோடி வசூலிக்கும் என்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வரும் நிலையில், கடுமையான ட்ரோல்களையும் சந்தித்து வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ், லியோ படத்திற்கு பின், அடுத்து ரஜினிகந்த் நடிக்கும் அவரின் 171-வது படத்தை இயக்க உள்ளார். தற்காலிகமாக தலைவர் 171 என்று பெயரிடப்பட்டிருந்த இந்த படத்திற்கு கூலி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய 3 படங்களுக்கும் வசனம் மற்றும் இணை இயக்குனராக பணியாற்றியவர் ரத்னகுமார். மேயாத மான், ஆடை மற்றும் குளுகுளு ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர், அடுத்து ஒரு படத்தை இயக்க உள்ளதால் கூலி படத்தின் இறுதிக்கட்ட திரைக்கதை பணி முடிந்தபின் விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக தற்போது சந்துரு அன்பழகன் என்பவர் கூலி படத்தின் இணை இயக்குனராக வசனங்கள் எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நேற்று கூலி படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், இந்த டீசரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் ரத்னகுமார், லியோ படம் ரூ600 வசூலித்ததாக கூறப்படும் நிலையில், கூலி படம் 4 டிஜிட் வசூலை ஈட்ட வேண்டும். சூப்பர் ஸ்டார் படத்திற்கு பக்காவான டைட்டில் கூலி. ரஜினிகாந்திக்காக கருப்பு மற்றும் தங்க நிறத்தை பயன்படுத்திய விதம் சூப்பர். அனிருத் மியூசிக் டிஸ்கோ பாடல் ஆரம்பமே அதிர்கிறது.
கண்டிப்பாக இந்த படம் ரூ1000 கோடி வசூலை எட்டும். முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் என்ற பழமொழியுடன் பதிவிட்டுள்ள ரத்னகுமார், இந்த படத்தில் தனக்கு பதிலாக வசனகர்த்தாவாக பணியாற்றி வரும் சந்துரு அன்பழகனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து திட்டி தீர்த்து வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் முடிச்சிடலாமா என்று கூலி படத்தின் இறுதி வசனத்தை சொல்லி கலாயத்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் – விஜய் இடையே கழுகு காக்கா என்று மோதல் இருந்து வந்த நிலையில், லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், கழுகு எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், பசி எடுத்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும் என்று கூறியிருந்தது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர் கூலி படத்தில் பணியாற்ற கூடாது என்று கூறிவிட்டதால் அவர் படத்தில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“