உதவி இயக்குனராக இருந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் தன்மீது கோபப்பட்டது குறித்தும், அதனால் என்ன நடந்தது என்பது பற்றியும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
1978-ம் ஆண்டு வெளியான அவள் ஒரு பச்சைகுழந்தை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த படம் வெற்றியை கொடுக்காத நிலையில், மீண்டும் 1981-ம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை படத்தை இயக்கினார். அதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்திருந்த நடிகர் விஜயகாந்த் இந்த படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.
பழிவாங்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து ஒரு குற்றவாளி எப்படி தப்பிக்கிறான் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். 80-களின் தொடக்கத்தில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை எஸ்.ஏ.சி – விஜயகாந்த இருவருக்குமே பெரிய வாழ்க்கையை கொடுத்தது.
தொடர்ந்து இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்ற நிலையில், அடுத்து சாட்சி, சட்டம் ஒரு விளையாட்டு, நான் சிகப்பு மனிதன், நீதிக்கு தண்டனை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதுவரை 70-க்கு மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், தான் உதவி இயக்குனராக இருந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் தன்மீது கோபப்பட்ட தருணம் குறித்து பேசியுள்ளார்.
1975-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் லதா நடிப்பில் வெளியான படம் நாளை நமதே. கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய இந்த படத்தில் எஸ்.ஏ.சி உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த படத்திற்காக ஒரு பாடல் காட்சி படமாக்கும்போது ஷாட் முடிந்தவுடன் எஸ்.ஏ.சி ஒன்ஸ்மோர் என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் எஸ்.ஏ.சி-யை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் நடித்து முடித்துள்ளார்.
அந்த காட்சி முடிந்தவுடன் எஸ்.ஏ.சியை அழைத்து அவர் தோல்மீது கை போட்டு பேசிய எம்.ஜி.ஆர், நீ பெரிய இயக்குனராக வருவடா என்று கூறியுள்ளார். அதன்பிறகு அடுத்த நாள் எஸ்.ஏ.சியை அழைத்துச்செல்ல அவரது வீட்டுக்கு படப்பிடிப்பு தளத்தில் இருந்து வண்டி வரவில்லை. இதனால் ஒரு ஆட்டோ பிடித்து வாஹினி ஸ்டூடியோவுக்கு சென்றால் அவரை யாரும் உள்ளே விடவில்லை.
அப்போது படத்தின் இயக்குனர் சேதுமாதவன் எஸ்.ஏ.சி-யிடம் வந்து அடுத்த படத்தில் வேலை செய்துகொள்ளலாம் சேகர் என்று கூறி வெளியில் அனுப்பியுள்ளார். இதனால் சோகமான எஸ்.ஏ.சி அங்கிருந்து கிளம்பிவிட்டதாக கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை லதாவுடன் பங்கேற்ற எஸ்.ஏ.சி இது குறித்து பேசியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இவ்வளவு திறமை இருக்கும் நீங்கள் எதற்காக உதவி இயக்குனராக இருக்க வேண்டும் என்பதால் எம்.ஜி.ஆர் அவ்வாறு சொல்லியிருப்பார் என்று நடிகை லதா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“