நடிகர் தனுஷ் குறித்து நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், எனது அனுமதி இல்லாமல் நான் பதிவு செய்த எல்.ஐ.சி. டைட்டிலை எடுத்துக்கொண்டார் என்று தயாரிப்பாளரும் இயக்குனருமான எஸ்.எஸ்.குமரன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில், இயக்குனர், நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ள அவர், இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். தயாரிப்பாளராக கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் என்ற படத்தை தனுஷ தயாரித்திருந்தார். நயன்தாரா விஜய் சேதுபதி இணைந்து நடித்த இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார்.
இந்த படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும், படப்பிடிப்பின்போது, நயன்தாராவுடன் காதல்வயப்பட்ட விக்னேஷ் சிவன், படத்தின் பட்ஜெட்டை பன்மடங்கு உயர்த்திவிட்டதாகவும் இதனால் தனுஷ் அவர் மீது கோபத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனாலும் இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களின் திருமண வீடியோ நெட்ஃபிளக்ஸ் தளத்தில் வெளியாக உள்ள நிலையில், இந்த திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கு ரூ10 கோடி உரிமைத்தொகை கொடுக்க வேண்டும் என்று தனுஷ் நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்ட நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும், தனுஷ் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். மேலும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "வாழு, வாழ விடு - இவையெல்லாம் நம்பும் தீவிர ரசிகர்களுக்காக... மனிதர்கள் மற்றவர்களுக்காக மாற்றமடைவதற்கும், மற்றவர்களின் சந்தோஷத்தில் இருந்து மகிழ்ச்சியை பெறுவதற்கும் நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.
இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னிடம் கேட்காமலே தனது டைட்டிலை எடுத்துக்கொண்டார் என்று கூறியுள்ள இயக்குனரும் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் தனது அறிக்கையில்,
மூன்று வினாடிக் காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டுத் தனுஷ் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தற்காக வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு எல்.ஐ.சி என்ற என் தலைப்பை உங்கள் கணவர் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள். எல்.ஐ.சி தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம்.
நான் தர முடியாது என்று சொன்ன பிறகும் அவரது படத்திற்கு எல்.ஐ.சி என்ற தலைப்பு வைத்து விளம்பரப்படுத்துகிறார் என்றால், 'உன்னால் என்ன பண்ண முடியும்' என்ற அதிகார நிலை தானே காரணமாய் இருக்க முடியும். அதற்கு எந்தக் கடவுள் மன்றத்தில் விக்னேஷ் சிவனைப் பதில் சொல்ல சொல்வீர்கள். இப்பொழுது வரை அந்தத் தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. என் படத்தையும் அது பாதிப்படையச் செய்திருக்கிறது.
நீங்கள் இங்கு எதையும் இலவசமாகச் செய்யவில்லை. எங்கள் படப்புகளை மட்டும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் படைப்பூலகதிற்கு மிக மோசமான வழிக்காட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனங்காட்டப்படுனீர்கள் என்பதை நினைவில் கொள்க என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“