ஜல்லிக்கட்டு மாடுகளை காப்பாற்றுவதற்காகப் போராடிய இளைஞர் சமுதாயம் இன்று இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதே! நியாயம்தானா? என்று நடிகரும் இயக்குனருமான தங்கர் பச்சான் உருக்கமாக வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்குவது தொடர்பாக பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், என்.எல்.சி நிறுவனத்தின் 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்யும் பணிக்காக நெய்வேலி சுற்றுள்ள, காரிவெட்டி, கற்றாழை, மும்முடிசோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் என.எல்.சி நிறுவனம் ஏற்கனவே நிலத்தை கையகப்படுத்திவிட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த இடங்களில், நேற்று முதற்கட்ட பணிகளை தொடங்கிய என்.எல்.சி நிறுவனம், கால்வாய் அமைப்பதற்காக நெல் வயல்கள் என்றும் கூட பாராமல் அதில் புல்டோசர் எந்திரங்களை விட்டு நெற்பயிர்களை அழித்து கால்வாய் அமைத்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள பதிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலம் என் நிலம்! இவர்கள் என் மக்கள்
என்எல்சி நிறுவனத்தால் எவை எவற்றையெல்லாம் இழந்தோம் என்பதெல்லாம் இதை ஒரு செய்தியாக பார்த்துவிட்டு கடந்து செல்பவர்களுக்கு தெரியாது.
தமிழகத்திற்கும் பிற மாநிலங்களுக்கும் 68 ஆண்டுகளாக மின்சாரம் தந்து இன்று கதறிக்கொண்டிருக்கின்ற என் மக்கள் தான் தமிழகத்திலேயே அதிகப்படியான நிலத்தை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.
உண்மையிலேயே எங்கள் கதறல் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா? எதற்காக போராடுகிறோம் என்பது இன்னும் விளங்கவில்லையா? இது பாமக சிக்கலோ வன்னியர் சமுதாய சிக்கலோ அல்ல. ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதார சிக்கல்.
ஜல்லிக்கட்டு மாடுகளை காப்பாற்றுவதற்காக போராடிய இளைஞர் சமுதாயம் இன்று இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதே நியாயம்தானா?
கல்வி கற்று எத்தனை பட்டங்கள் பெற்றாலும், அரசியல் விழிப்புணர்ச்சி பெறாத போராடத் தெரியாத சமூகம் இறுதிவரை அரசியல் கள்ளர்களின் காலடியில் அடிமைகளாகவே கிடந்து வாக்குகளை மட்டும் செலுத்திவிட்டு புலம்பியே செத்துபோகும்
என பதிவிட்டுள்ளார். தங்கர் பச்சானின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“