தமிழ் சினிமாவில் எவர் கிரீன் காமெடி காட்சிகள் நிறைந்த திரைப்படம் கரகாட்டக்காரன். இந்த படத்தின் கதையை தாண்டி இதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கவுண்டமணி – செந்தில் கூட்டணி இந்த படத்தில் பெரிய அளவில் காமெடி காட்சிகளை வொர்க்அவுட் செய்திருப்பார்கள். கரகாட்டக்காரன் 1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான படம்.
ராமராஜன் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தின் மூலம் நடிகை கனகா தமிழ் சினிமாவில் அறிமுகமானர். மேலும் கவுண்டமணி செந்தில், கோவை சரளா, காந்திமதி, சண்முகசுந்தரம், சந்தானபாரதி, சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, இளையராஜா இசையமைத்திருந்தார். 2 கரகாட்ட கோஷ்டிக்கு இடையே நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து காமெடியாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த, இந்த படத்தில், கவுண்டமணி – செந்தில் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் பேசப்பட்டு வருகிறது.
தனித்தன்மையுடன் இருக்கும் கரகாட்டக்காரன் படத்தில், வரும் வாழைப்பழ காமெடி, அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு காமெடி காட்சியாக பேசப்பட்டு வருகிறது. இந்த படம் கமிட் ஆகும்போது அதில் கவுண்டமணி கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் எஸ்.எஸ்.சந்திரன், ஆனால் ராமராஜன் கவுண்டமணியை இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் வலுக்கட்டாயமாக சொல்லி, அவரை மாற்றியுள்ளார். அப்படி கடைசி நேரத்தில் படத்தில் இணைந்த கவுண்டமணி, இன்றுவரை பேசப்படக்கூடிய காமெடி காட்சிகளை கொடுத்துள்ளார்.
இந்த படம் வெளியாகி 35 வருடங்கள் கடந்துள்ள நிலையில், கரகாட்டக்காரன் திரைப்படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியள்ளது. இந்த படம் வெளியான காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 450 நாட்கள் திரையரங்குகளில் ஓடி, அப்போதே ரூ5 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த கரகாட்டக்காரன் திரைப்படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கரகாட்டக்காரன் படத்தின் 2-ம் பாகம் எடுக்க விருப்பம் இருப்பதாக கங்கை அமரன் சமீபத்தில் கூறியிருந்தாலும், அதற்கு ராமராஜன் உடன்பாடு இல்லை என்று கூறிவிட்டார்.
இதனிடையே இளையராஜாவின் பிறந்த நாளில் அவரை சந்தித்து ஆசி பெற்ற ராமராஜன் ஜூன் 2-ந் தேதி இளையராஜா பிறந்த நாள், ஜூன் 16-ந் தேதி கரகாட்டக்காரன் படத்திற்கு 36 வயது. இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளோம். விரைவில் இது குறித்து செய்திகள் வெளியாகும் என்று கூறியுள்ளார். 2 கே குழந்தைகளுக்கு பெரிய பரிட்சையம் இல்லாத இந்த திரைப்படம், தற்போது ரீ-ரிலீஸ் செய்தால் செந்தில் – கவுண்டமணி காமெடி காட்சிகள் நிச்சயம் அவர்களை கவரும் என்று நம்பலாம்.