/indian-express-tamil/media/media_files/2025/07/12/mgr-fight-master-2025-07-12-13-26-29.jpg)
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் ஒருவர், அதே பெயர் மற்றும் புகழை தனது இறுதி மூச்சு வரை தக்கவைத்துக் கொள்வது கடினமாகும். அப்படி ஒரு நடிகர் இருந்தார் என்றால், அது எம்.ஜி.ஆராகவே இருக்க முடியும்.
சினிமாவில் மிக அதிகமான ரசிகர் வட்டத்தை கொண்ட ஒரு நடிகர் எம்.ஜி.ஆர். இன்றைய காலகட்டத்தில் இருக்கும் உச்ச நடிகர்களுக்கு கூட எம்.ஜி.ஆருக்கு இருந்த அளவிற்கு ரசிகர்கள் இல்லை என்பது நிதர்சனம்.
அந்த அளவிற்கு பெரும் புகழை எம்.ஜி.ஆர் இறுதிவரை பெற்றிருந்தார். குறிப்பாக, அவரது தனிப்பட்ட குணத்திற்காகவும் பலர் எம்.ஜி.ஆரை விரும்பினர். உதவி கேட்டு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தேவையானவற்றை செய்யும் தன்மை எம்.ஜி.ஆருக்கு இருந்தது. இதன் காரணமாகவே எம்.ஜி.ஆருக்கு, கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் என்று பலர் கூறுகின்றனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் பழம்பெரும் ஃபைட் மாஸ்டர் ஒருவர், எம்.ஜி.ஆர் தனக்கு செய்த உதவியை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, "ஒரு இடத்தை வாங்குவதற்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். இதனை அறிந்த எம்.ஜி.ஆர் எனக்கு பண உதவி செய்தார். குறிப்பாக, பணத்தை எண்ணிக் கொடுக்காமல் அப்படியே அள்ளிக் கொடுத்தார். அதனை எண்ணிப் பார்த்த போது ரூ. 5,800 இருந்தது.
15 நாட்களுக்கு பின்னர் இடத்தை பதிவு செய்ததற்கான பத்திரம் எனக்கு கிடைத்தது. அதனை எம்.ஜி.ஆரிடம் சென்று காண்பித்தேன். அதனை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஏறத்தாழ, ஒரு மாதத்திற்கு பின்னர், அந்த பணத்தை எம்.ஜி.ஆரிடம் திருப்பி கொடுப்பதற்காக சென்றேன்.
இதனால், என்னை பார்த்து முறைத்த எம்.ஜி.ஆர், அந்தப் பணத்தை திருப்பி பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். அந்தப் பணத்தில் எனது இரு மகள்களுக்கும் நகை வாங்கி கொடுக்குமாறு எம்.ஜி.ஆர் கூறினார். அதன்படி, குழந்தைகளுக்கு நகை வாங்கி விட்டு, அதனையும் எம்.ஜி.ஆரிடம் காண்பித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.