பல திரைப்படங்களில், வில்லன், காமெடி மற்றும் ஃபைட்டர் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் பெசன்ட் ரவி, தனது வாழ்க்கையில் தான் சந்தித்த சம்பவங்கள், மேற்கொண்ட தற்கொலை முயற்சி மற்றும் அதில் இருந்து மீண்டு வந்தது குறித்து பேசியுள்ளார்.
1995-ம் ஆண் கார்திக் நடிப்பில் வெளியான லக்கிமேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பெசன்ட் ரவி. அதன்பிறகு ஷங்கரின் முதல்வன், விஜயின் குஷி, அஜித்தின் சிட்டிசன், சமீபத்தில் வெளியான அந்தகன், ராஜாக்கிளி, சுமோ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பட்டத்து யானை படத்தில் சந்தானத்துடன் இணைந்து இவர் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
பார்ப்பதற்கு வில்லன், முரட்டுத்தனமாக இருந்தாலும் பெசன்ட் ரவி, மனதளவில் பல ஏமாற்றங்களை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனது மனைவியுடன் இணைந்து பேட்டி ஒன்றில் பங்கேற்ற பெசன்ட் ரவி, என் வாழ்க்கையில் மறக்க முடியாத சில சம்பவங்களை சொல்ல வேண்டும். என்னுடைய எனக்கு சில வருடங்களுக்கு முன்பு ஆக்ஸிட்டி டிசார்டர் (Anxiety Disorder) இருந்தது. அந்த நோயால் ஒரு கட்டத்தில் நான் உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று கூட நினைக்கும் தருணமும் வந்தது.
அந்த சமயத்தில், என்னுடைய மனைவி தான் என்னை குழந்தை போல பார்த்துக்கொண்டார். அதனால் தான், நான் இன்று உயிருடன் நன்றாக இருக்கிறேன். எங்களுக்கு திருமணம் நடக்கும் போது எனக்கு 22 வயது. என் மனைவிக்கு வயது 16 என்று பெசன்ட் ரவி கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவரது மனைவி, ரவி எனக்காக பல விஷயங்கள் செய்திருக்கிறார். ஆனால் சின்ன சின்ன விஷயத்திற்கும் ரவிக்கு கோபம் வந்துடும் அதுதான் எனக்கு பிடிக்காது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரைகளிலும் நடித்து வரும் பெசன்ட் ரவி, ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிக நாட்கள் விளையாடிவர். அப்போது அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து பல இடங்களில் பெருமையாக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.