தமிழ் சினிமாவில் கலைவாணர் என்று போற்றப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் திடீரென மறைந்துவிட்ட நிலையில், இவர் வைத்துவிட்டு சென்ற பெரும் கடன் தொகையை தள்ளுபடி செய்துள்ளார் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன்.
க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன். நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அறிமுக திரைப்படமான சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து என்.எஸ்.கிருஷ்ணன் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
மேலும் தனது நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு தேவையாக கருத்துக்களை வைத்து அசத்தியவர். கலைவாணர் என்ற பட்டத்துடன் வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன், தனது நகைச்சுவையால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்தாமல் தனது நடிகைச்சுவை மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆரே தனது குருவாக ஏற்றுக்கொண்டார்.
1952-ம் ஆண்டு பாராசக்தி படத்தின் மூலம் அறிமுகமான சிவாஜி கணேசனின் 2-வது படம் பணம். இந்த படத்தை இயக்கிய என்.எஸ்.கிருஷ்ணன், படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்து துரை என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் தயாரிப்பில் இருக்கும்போது, அழுத்தமான அப்பா கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்துள்ளனர். அப்போது ஒல்லியான ஒரு நபரை அழைத்து வந்துள்ளார் என்.எஸ்.கிருஷ்ணன்.
பணம் படத்தில் அப்பா கேரக்டரில் நடிக்க இவரை போடலாம் என்று சொல்ல, தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த கேரக்டர் ஒரு முக்கியமானது கேரக்டர். ஒல்லியான உடலமைப்புடன் இருக்கும் இவர் எப்படி அந்த கேரக்டரில் சிறப்பாக நடிப்பார் என்று ஏ.எல்.சீனிவாசன் யோசிக்கும்போதே, அவருக்கு சம்பளமா ரூ1000 கொடுத்துவிடு என்று கூறியுள்ளார்.
![KA Thangavelu](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/Sm2vN0Ys4vu1akXzZSlF.jpg)
இதை கேட்டு ஏ.எல் சீனிவாசன் மட்டுமல்லாமல், அந்த நடிகரும் அதிர்ச்சியாகியுள்ளார். நாடக கம்பெனியில், ஒரு மாதத்திற்கே ரூ10 சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அவர், இந்த படத்திற்கு ரூ1000 என்றதும் அதிர்ச்சியில் இருந்தா நிலையில், நண்பரின் பேச்சை தட்டாத ஏ.எல்.சீனிவாசன், அவரிடம் ரூ1000 கொடுக்க, அதை அவர் வாங்க தயங்கியுள்ளார். ஆனாலும் என்.எஸ்.கே வாங்கிக்கோப்பா, உன் நடிப்புக்கு முன் இந்த படம் அவ்வளவு பெரியது அல்ல என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு, அதனை வாங்கிக்கொண்ட அந்த நடிகர் பணம் படத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார். அந்த நடிகர் தான் கே.ஏ.தங்கவேலு. இதனிடையே 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழாவில், தனது மனைவி டி.ஏ.மதுரத்துடன் இணைந்து நாடகம் நடத்திய என்.எஸ்.கே அடுத்த நாள் ஆகஸ்ட் 16-ந் தேதி மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பிறகு 1957 ஆகஸ்ட் 30-ந் தேதி தனது 48 வயதில் என்.எஸ்.கே மரணமடைந்தார். அவர் மரணத்திற்கு பின், அப்போதைய நடிகர் சங்கம், என்.எஸ்.கிருஷ்ணனின் கடனை தள்ளுபடி செய்யும்படி மெட்ராஸ் பிச்சர்ஸ் ஏ.எல்.சீனிவாசனுக்கு கடிதம் எழுத, உடனடியாக என்.எஸ்.கே தனக்கு தர வேண்டிய ரூ3,70,000 கடனை தள்ளுபடி செய்துள்ளார். இன்றைய மதிப்பில் இந்த படம் 12 கோடிக்கு மேல் இருக்கும். இந்த தகவலை பத்திரிக்கையளாரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“