/indian-express-tamil/media/media_files/2025/08/14/jaihind-movie-comedy-2025-08-14-19-28-14.jpg)
தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்ட செந்தில் – கவுண்டமணி கூட்டணியில் உருவான பல படங்கள் இன்றும் காமெடிக்காக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜெய்ஹிந்த் படத்தில் வந்த காமெடி காட்சிகள் அனைத்தும் ஒரு நாள் இரவில் எழுதப்பட்டது என்று அந்த ட்ராக்குகளை எழுதியவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமையுடன் வலம் வரும் அர்ஜூன் கர்நாடகாவை சேர்ந்தவர் என்றாலும், தமிழ்நாட்டில் அதிகப்படியான ரசிகர்களை வைத்துள்ளார். தொடக்கத்தில் ஒருசில கன்னட படங்களில் நடித்த இவர், 1984-ம் ஆண்டு வெளியான நன்றி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, கடமை, இளமை, எங்கள் குரல், யார், அண்ணனுக்கு ஜே என பல வெற்றிப்படங்களில் நடித்திருந்தார்,
1992-ம் ஆண்டு வெளியான சேவகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அர்ஜூன், 1994-ம் ஆண்டு இயக்கிய படம் ஜெய்ஹிந்த். நாட்டுக்கே அச்சுறுத்தலாக இருக்கும் தீவிரவாத கும்பலை, ஜெயில் கைதிகள் உதவியுடன் பிடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கதை ஒரு பக்கம் அசத்தி இருந்தாலும், இதில் வரும் செந்தில் – கவுண்டமணி காமெடி இன்றைக்கு பெரும் பிரபலம்.
போலீஸ் அதிகாரியான கவுண்டமணி தூங்கும்போது அவரது கனவில் செந்தில் வருவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும். கனவு முடிந்தவுடன் கவுண்டமணி சிக்கலில் மாட்டிக்கொள்வார். ஒவ்வொரு முறை கனவு வரும்போதும் அதில் செந்தில் பலவிதமாக கெட்டப்புகளில் வந்து அசத்தியிருப்பார். இன்றைக்கும் டிவியில் இந்த காமெடி ட்ராக் வரும்போது, ரசிகர்கள் என்ஜாய் செய்து பார்ப்பதை மறுக்க முடியாது. அந்த அளவிற்கு பெரிய வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்தின் காமெடி காட்சிகள், ஒரே நாள் இரவில் எழுதப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா?
ஜெய்ஹிந்த் படத்தை எடுக்க முடிவு செய்த அர்ஜூன், இந்த காமெடியை எழுதிய ராஜகோபால் என்பவருக்கு போன் செய்து, ஜெய்ஹிந்த் என்று ஒரு படம் பண்றோம். காமெடி ட்ராக் வேண்டும் என்று கூறியுள்ளார். அவரோ, நான் உதவியாளராக ஒரு படத்தில் இருக்கிறேன். வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்று சொல்ல, அர்ஜூன் நீங்கள் அங்கிருந்தே எழுதுங்கள், லைன் மட்டும் பிடித்து எனக்கு போனில் சொல்லிவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதுவரைக்கும் நீங்கள் பண்ண படங்களை விட இது ஹைலைட்டாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அப்போது 5 நிமிடங்களில், இந்த லைனை கூறியுள்ளார். கவுண்டமணி தூங்குகிறார். தூங்கினால் கனவில் செந்தில். ஒவ்வொரு முறை கனவு வரும்போதும் செந்தில் ஒவ்வொரு கெட்டப்பில் வருகிறார். இதுதான் சார் என்று ராஜகோபால் கூறியுள்ளார். அதன்பிறகு, காலையில் போன் செய்த அர்ஜுனுக்கு அன்று இரவே காமெடி ட்ராக்குகளை கொடுத்துள்ளார். இதை கேட்ட அர்ஜூன் சூப்பராக இருக்கிறது அங்கேயே எழுதிவிடுங்கள் என்று கூறியுள்ளார். செந்தில் என்னென்ன கெட்டப்பில் வரவேண்டும் என்பதை ராஜகோபால் வரைந்தது போறே அர்ஜூன் படத்தில் வைத்துள்ளார்.
5 நிமிடத்தில் உருவான ஒரு லைன், ஒரே நாளில், காமெடி ட்ராக்காக உருவாகி 30 வருடங்கள் கடந்த பின்னரும் அந்த காமெடி காட்சிகள் இன்றும் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தக்கூடிய காட்சிகளாக நிலைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ராஜகோபால் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.