தனது கண் சின்னதாக இருப்பதாக கூறி முதல் பட வாய்ப்பு பறிபோனாலும், அந்த கண்னை வைத்தே முதல் படத்தில் அறிமுகமானவர் தான் நடிகர் ஜெய்சங்கர்
தமிழ் க்ளாசிக் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி போல் நடிப்பில் உச்சம் தொட்ட நடிகர் ஜெய்சங்கர். 1965-ம் ஆண்டு வெளியான இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் அதே ஆண்டு 5 படங்களில் தொடர்ந்து நாயகனாக நடித்தார். இதில் அவரது 3-வது படமான பஞ்சவர்ணக்கிளி படத்தில் பாலு, சேகர் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
நடிக்க தொடங்கிய 3-வது படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்த ஜெய்சங்கரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது. குறிப்பாக ஜெய்சங்கர் இந்த படத்தின் ஒரு கேரக்டர் வில்லனாக நடித்ததற்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சினிமாவில் உள்ள பிரபலங்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. இந்த நடிப்பை பார்த்த சின்னப்ப தேவர், ஜெய்சங்கரை பாராட்டியுள்ளார்.
அதன்பிறகு பல படங்களில் நடிக்க தொடங்கியிருந்தாலும், இரவும் பகலும் படத்திற்கு முன்பே ஜெய்சங்கர் ஒரு படத்தில் அறிமுகமாக இருந்தார். ஏ.வி.எம். நிறுவனம் சார்பில், 1962-ம் ஆண்டு வெளியான திரைப்படம் அன்னை. சவுக்கார் ஜானகி, பானுமதி, எஸ்.வி. ரங்காராவ், சந்திரபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தில், பானுமதியின் மகன் கேரக்டரில் ராஜா என்ற தெலுங்கு நடிகர் நடித்திருப்பார். இந்த கேரக்டரில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் ஜெய் சங்கர் தான். ஆனால் அவரது கண்கள் சின்னதாக இருக்கு என்று சொல்லி ஏ.வி.எம்.நிறுவனம் அவரை நிராகரித்துவிட்டது. இதன் காரணமாக தெலுங்கு நடிகர் ராஜா அந்த கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு இரவும் பகலும் திரைப்படத்தில் ஜெய் சங்கர் அறிமுகமானார்.
இந்த படத்தில் ஜெய்சங்கர் நடிக்க முக்கிய காரணம் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா தான். அவர் தான் அந்த படத்தின் இயக்குனர் ஜோசப்பிடம் ஜெய்சங்கரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதன்பிறகு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு ஜெய்சங்கர் அந்த கேரக்டரில் நடிக்க தேர்வாகியுள்ளார். இப்போது இயக்குனர் ஜோசப் லுக் டெஸ்ட் எடுக்கும்போது, யாரும் உங்கள் உடையை பார்க்கவில்லை. கண்களைத்தான் பார்த்தார்கள். இன்றைய நடிகர்களில் யாருக்கும் இதுபோன்ற சின்ன கண்கள் இல்லை. உங்களுக்கு வித்தியாசமாக இருக்கிறது என்பதால் இந்த படத்தில் தேர்வு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
எந்த கண்களால் முதல் பட வாய்ப்பு பறிபோனதூ அதே கண்கள் தான் ஜெய்’சங்கருக்கு முதல் பட வாய்ப்பினை பெற்று தந்துள்ளது. முதல் படத்தில் ஏ.வி.எம் நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்ட ஜெய்சங்கர், பின்னாளில் ஏ.வி.எம் தயாரித்த பல படங்களில் நாயகனாக நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“