எதிர்பாராத டுவிஸ்ட், விறுவிறுப்பான திரைக்கதை என மிரட்டியிருக்கும் "போர் தொழில்" படத்தின் முழு விமர்சனம்.
Advertisment
கதைக்களம் :
திருச்சி நெடுஞ்சாலையில் ஒரு பெண் கொடூரமாக கொலை செய்யபடுகிறாள், அந்த கொலை வழக்கை விசாரிக்கும் உள்ளூர் போலீஸாரால் இந்த வழக்கை சரிவர கண்டுபிடிக்க முடியாததால், மற்றொரு ஸ்பெஷல் டீமை உருவாக்கி அனுபவம் வாய்ந்த போலீஸ் அதிகாரி எஸ்.பி. லோக்நாத்திடம் (சரத்குமார்) இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
வரது குழுவில் புதிதாக இணைந்துள்ள முன் அனுபவமே இல்லாமல் படிப்பு அறிவை மட்டுமே கொண்டுள்ள பிரகாஷ் (அசோக் செல்வன்) இருக்கிறார். அனுபவம் வாய்ந்த லோக்நாத்தும், பிரகாஷிம் இணைந்து எப்படி அந்த சீரியல் கில்லரை கண்டு பிடிக்கின்றனர் என்பதை விறுவிறுப்பாக சொல்லி இருக்கும் படமே இந்த "போர் தொழில்".
Advertisment
Advertisements
நடிகர்களின் நடிப்பு ;
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறி நடிக்கும் திறன் கொண்ட அசோக் செல்வனுக்கு இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள அப்பாவியான போலீஸ் ரோலும் பக்காவாக பொருந்தியிருக்கிறது. எதுவுமே தெரியாமல், எல்லாம் தெரிந்தது போல நடந்து கொள்ளும் அவரது எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது மேலும் சில மாஸ் காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஹீரோவுக்கு இணையான ரோலில் நடித்திருக்கிறார் சரத்குமார். தொடர்ச்சியாக நல்ல ரோல்களை தேர்வு செய்து,அதில் மாஸ் காட்டும் சரத்குமாருக்கு மற்றும் ஒரு லைஃப் டைம் ரோலாக இப்படம் அமைந்திருக்கிறது. கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நம்மை மிரட்டிருக்கிறார். மற்ற நடிகர்களின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
இயக்கம் மற்றும் இசை :
அறிமுக இயக்குனரான விக்னேஷ் ராஜா திரைக்கதையில் மிரட்டியிருக்கிறார். தேவையற்ற காட்சிகள், மாஸ் ஃபைட்டுகள், பில்டப் சாங்க்ஸ் என எதுவும் இல்லாமல் கதைக்கு தேவையான உண்மையான எழுத்தையும், இயக்கத்தையும் கொடுத்திருக்கிறார்.
இது போன்ற கடினமான திரில்லர் கதையை, நேர்த்தியாக அவர் கையாண்ட விதத்திற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். ஶ்ரீஜித் சாரங்கனின் எடிட்டிங் படத்துக்கு மிகப்பெரிய விறுவிறுப்பை கொடுத்திருக்கிறது. ஜேக்ஸ் பிஜாயின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம் திரில்லர் படமா அல்லது ஹாரர் படமா என்று குழம்பும் அளவிற்கு இசையில் மிரட்டியிருக்கிறார்.
படம் எப்படி :
ஒரு திரில்லர் படத்திற்கு தேவையான அத்தனை விறுவிறுப்பும் இப்படத்தில் அமைந்திருப்பதே இப்படத்தின் வெற்றியை ஓரளவு உறுதி செய்திருக்கிறது. கொலையாளிகளை பிடிக்க போலீஸ் அதிகாரிகள் செய்யும் வேலைகள் நம்மை மிரள வைக்கிறது. அது மட்டுமல்லாமல் இடைவேளைக்கு முன்னரே போலீஸ் அதிகாரிகள் கொலையாளியை பிடித்து விட்டதால் அதன் பின் கதை எப்படி நகரப் போகிறது எந்த எதிர்பார்ப்புடனே இடைவேளை வருகிறது.
ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு சற்றும் குறைவில்லாமல் இரண்டாம் பாதியின் திரைக்கதையை அமைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் இயக்குனர். இந்த சமூகம் ஒரு மனிதனை எப்படி கொலையாளியாக மாற்றியிருக்கிறது என்று இயக்குனர் சித்தரித்திருக்கும் விதமும் நம்பும் படியாக அமைந்திருப்பதால் படத்தை முழுமையாக என்ஜாய் செய்ய முடிகிறது.
மொத்தத்தில் ஒரு சில குறைபாடுகள் இருந்தாலும், ஒரு படமாக பார்க்கும் போது, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அருமையான "சைக்கோ திரில்லர்" படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது இந்த "போர் தொழில்".
- நவீன் சரவணன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil