முதன் முதலாக கலைவாணர் என்.எஸ்.கே-வை சந்தித்த கவிஞர் வாலிக்கு முயல் ஆமை கதை குறித்து கேட்ட கேள்விக்கு வாலி தோல்வியடைந்து விட்டார் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன். 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி நாகர்கோவிலில் பிறந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அறிமுக திரைப்படமான சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து என்.எஸ்.கிருஷ்ணன் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் தனது நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு தேவையாக கருத்துக்களை வைத்து அசத்தியவர். கலைவாணர் என்ற பட்டத்துடன் வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன், நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்தாமல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.
என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆரே தனது குருவாக ஏற்றுக்கொண்டார். சினிமா உலகில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை தீர்த்து வைக்க என்.எஸ்.கே வை அழையுங்கள் என்று சொல்லும் அளவுக்கு அனைவருடனும் அன்பாக பழகக்கூடிய குணம் கொண்ட என்.எஸ்.கிருஷ்ணனை ஒருமுறை கவிஞர் வாலி சந்தித்துள்ளார். அப்போது இவர் தான் கவிஞர் வாலி. பாட்டெல்லாம் எழுதுவார் என்று அவரின் நண்பர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதை கேட்ட என்.எஸ்.கிருஷ்ணன், அப்படியா பாட்டெல்லாம் எழுதுவியா? அப்போ உனக்கு தமிழ் நல்ல வரும். எனக்கு முயல் ஆமை கதை தெரியுமா என்று கேட்டுள்ளார். என்னடா இது சின்ன பசங்கள்ட கேட்க வேண்டியதை நம்மகிட்ட கேட்கிறாரே என்று நினத்துக்கொண்ட வாலி, ஆமை வராதுனு தெரிஞ்சி முயல் தூங்கிடுச்சி அதனால் தோத்துடுச்சி என்று வாலி சொல்ல, இல்லை இதுக்கு ஒரு சிறந்த பதில் இருக்கு நீ கண்டுபிடி என்று கூறியள்ளார்.
வாலியும் திரும்ப திரும்ப அதையே சொல்ல, நான் சொன்னதை சொல்லிக்கொண்டே இரு என்று சொன்னார். முயல் ஆமையால் தோற்றது என்று சொல்லிக்கொண்டே இருந்துள்ளார். வாலி நல்லா வேகமாக சொல்லு என்று என்.எஸ்.கே சொல்ல, இறுதியில் முயலாமையால் தோற்றது என்று வந்தது. இதை வாலி என்.எஸ்.கேவிடம் சொல்ல, தாமதமாதான் கண்டுபிடிச்சிருக்க அதனால தமிழ் உனக்கு தாமதமாதான் வரும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“