தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற கவிஞரான கவியரசர் கண்ணதாசன், தான் உச்சத்தில் இருந்த காலத்தில், எழுதிய ஒரு பாடலை பல இசையமைப்பாளர்கள் நிராகரித்துள்ள நிலையில், கடைசியில் பிடிவாதமாக ஒரு படத்தில் சேர்ந்துள்ளார். அந்த பாடலும் பெரிய ஹிட் அடித்துள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில் மனித உணர்ச்சிகள் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியவர் கண்ணதாசன். கவியரசர் என்று அழைக்கப்படும் இவர், காதல், அன்பு, சோகம், ஏமாற்றம், மகிழ்ச்சி என அனைத்து உணர்ச்சிகளுக்கும் தனித்தனியாக பாடல்கள் எழுதி அசத்தியுள்ள நிலையில், இயக்குனர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் என பல திறமைகளை உள்ளடக்கியவர்.
ஓய்வு நேரங்களில் புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக வைத்திருந்த கண்ணதாசன், அப்படி ஒருநாள் தனி பாடல் ஒன்றை படித்துள்ளார். இலக்கிய நடையில் இருந்த அந்த பாடல் கண்ணதாசனை மிகவும் கவர்ந்துள்ள நிலையில், இந்த பாடலை சினிமாவுக்கு ஏற்றபடி மாற்றலாம் என்று மாற்றி எழுதியுள்ளார். அதன்பிறகு இந்த பாடலை திரைப்படத்தில் சேர்க்கலாம் என்று நினைத்து, தான் பாடல் எழுதும் படங்களின் இசையமைப்பாளர்களிடம் இந்த பாடல் குறித்து பேசியுள்ளார்.
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், வேதா உள்ளிட்ட பல இசையமைப்பளர்கள் இந்த பாடல் முழுக்க முழுக்க இலக்கிய நடையில் உள்ளது. இதனால் மக்களுக்கு புரியாது என்று கூறி நிராகரித்துள்ளனர். கடைசியில் இந்த பாடல் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சென்றுள்ளது. பாடலை பாடித்து பார்த்த எம்.எஸ்.வி என்ன கவிஞரே எல்லாம் காய் காய் என்று இருக்கிறது. இது எப்படி ரசிகர்களுக்கு புரியும். இந்த பாடல் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
அப்போது அங்கு வந்த படத்தின் இயக்குனரிடமும் பாடலை கொடுத்துள்ளார் கண்ணதாசன். அந்த பாடலை படித்த இயக்குனர் பாடல் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதை எப்படி படமாக்குவது என்று தெரியவில்லை என்று சொல்ல, அதற்கு நான் யோசனை சொல்கிறேன். இந்த பாடல் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார். இசையமைப்பாளர் இயக்குனர் என இருவருக்குமே இந்த பாடல் பிடிக்கவில்லை என்றாலும் கண்ணதாசனின் நம்பிக்கைக்காக படத்தில் வைத்துள்ளனர்.
இந்த படம் வெளியானபோது, கண்ணதாசனின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்ததுஅந்த பாடல் தான்பி.ஆர்.பந்தலு இயக்கத்தில் கடந்த 1962-ம் ஆண்டு வெளியான பலே பாண்டியா திரைப்படத்தில் இடம்பெற்ற ‘’அத்திக்காய் காய் காய்’’ என்ற பாடல். டி.எம்.எஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா, ஜமுனா ராணி ஆகியோர் பாடிய இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“