தமிழ் சினிமாவின் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் – கவிஞர் வாலி இருவரும் இணைந்தால் பெரிய ஹிட் பாடல் கிடைக்கும் என்பதை தாண்டி, வாலி ஒரு பெரிய ஹிட் பாடலை கொடுக்க, எம்.எஸ்.வி கட்டிய பந்தயமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. அது என்ன பாடல்? என்ன படம்?
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும், தனிப்பட்ட முறையில் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்துள்ளனர். அதேபோல் எம.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் வாலி.
சினிமா வாய்ப்பு தேடி சலித்து போன வாலி, ஊருக்கு திரும்ப முடிவு செய்தபோது, அவரது மனதை மாற்றி மீண்டும் வாய்ப்பு தேட தூண்டியது கண்ணதாசன் எழுதிய ‘மயக்கமாக கலக்கமாக’ என்ற பாடல் தான். அதன்பிறகு எம்.எஸ்.வி அறிமுகம் கிடைத்து பின்னாளில் பெரும் கவிஞரான உருவெடுத்து கண்ணதாசனின் அன்பை பெற்றவர் தான் வாலி. எம்.எஸ்.வி இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள வாலி, எம்.ஜி.ஆர் நடிப்பில், வந்த ஒரு படத்தில் பாடல் எழுத வந்துள்ளார்.
இதற்காக, ஸ்டூடியோவுக்கு வந்த வாலி அமர்ந்திருக்க, இயக்குனர் கே.சங்கர், தயாரிப்பாளர் வேலுமணி, இசையமைப்பாளர் எம்.எஸ்.வி ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது எம்.எஸ்.வி, தனது தங்க வாட்ச், மோதிரம், செயின் ஆகியவற்றை கழற்றி ஹார்மோனியத்தில் வைத்துவிட்டு என்னை வியக்க வைக்கும் அளவுக்கு பல்லவி சொன்னால் இந்த மூன்றும் உனக்குதான் என்று சொல்ல, அருகில் இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். வாலியும் அதனை ஒப்புக்கொண்டார்.
இப்போது அனைவரும் வாலி என்ன பல்லவி சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும்போது, வெற்றிலைபாக்கு போட்ட வாலி, ஒரு சில நிமிடங்கள் கழித்து ஒரு தாளில் ஒரு பல்லவியை எழுதி எம்.எஸ்.வியை பார்த்து சிரித்துக்கொண்டே கொடுத்துள்ளார். சுற்றி இருப்பவர்கள் என்ன பல்லவி என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்த நிலையில், எம்.எஸ்.வி அந்த பல்லவியை படிக்கிறார். படித்து முடித்தவுடன் வாலியை பார்த்து சிரித்துக்கொண்டே அந்த மோதிரம், செயின் வாட்ச் என அனைத்தையும் கொடுத்துள்ளார்.
இதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட வாலி எனக்கு இதெல்லாம் தேவையில்லை அண்ணா. உங்கள் அன்பும் ஆதரவும் தான் இருந்தால் போதும், இதை நானே வாங்கிக்கொள்வேன் என்று கூறியுள்ளார். அந்த நேரத்தில் என்ன பல்லவி என்று அனைவரும் ஆர்வமாக பார்க்க, ஒரு அற்புதமான பல்லவி கொடுத்துள்ளார் என்று எம்.எஸ்.வி இயக்குனர் கே.சங்கரிடம் கூறியுள்ளார். அந்த பல்லவி தான் ‘’காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன், அதை கேட்டு வாங்கி போனால் அந்த கன்னி என்ன ஆனாள்’’ என்ற பாடல்.
இந்த பல்லவியை எல்லோரும் ரசித்திருக்கிறார்கள். ஜி.என்.வேலுமணி தயாரிப்பில் இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் சரோஜா தேவி நடிப்பில் வெளியாக கலங்கரை விளக்கம் என்ற படத்தில் தான் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடல் இப்போதும் பலரின் பேவரெட் பாடலாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அதேபோல் வாலி பல ஹிட் பாடல்களை கொடுத்து தனது பாடல்கள் மூலம் அழியாத புகழை பெற்றுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“