பாடல் எழுத வர முடியாத சூழலில் தன்னிடம் நக்கலாக பேசிய எம்.ஜி.ஆர் பட தயாரிப்பாளரை போனிலேயே திட்டிய கவிஞர் வாலியை எம்.ஜி.ஆர் பாராட்டி பாடல் பதிவை 2 நாட்கள் தள்ளிவைத்த நிகழ்வு தமிழ் சினிமாவில் நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என்று போற்றப்படுபவர் வாலி. எம்.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விக்ரம் சூர்யா, சிம்பு, தனுஷ் உள்ளிட்ட இன்றைய நடிகர்களுக்கும் தனது எழுத்தின் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கண்ணதாசன் எம்.ஜி.ஆரை விட்டு பிரிந்தபோது எம்.ஜி.ஆரின் அஸ்தான பாடல் ஆசிரியராக மாறியவர்.
எம்.ஜி.ஆருக்கு பல வெற்றிப்பாடல்களை கொடுத்த வாலி, கடைசி வரை முன்னணி கவிஞராக இருந்தாலும், அவ்வப்போது கோபத்திலும் கொந்தளித்த சம்பவங்களும் நடந்துள்ளது. ஆனாலும் இவரது கோபம் நியாமாகத்தான் இருக்கும் என்பது பலரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் பாடல் எழுத வராததால் தன்னை நக்கலாக பேசிய எம்.ஜி.ஆர் பட தயாரிப்பாளரை போனிலேயே திட்டியுள்ளார் வாலி.
கடந்த 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா நடிப்பில், கிருஷ்ணன் நாயர் என்பவர் இயக்கிய படம் அன்னமிட்ட கை. இந்த படத்தை சிவசாமி என்பவர் தயாரித்திருந்தார். படத்தின் பாடல்கள் பதிவு தொடர்பான வேலைகள் நடந்துள்ளது. அந்த நேரத்தில் வாலியின் மனைவிக்கு சிசேரியனில் குழந்தை பிறக்க இருந்தது. அப்போது வாலிக்கு போன் செய்த தயாரிப்பாளர் சிவசாமி இன்று இன்று பாடல் எழுதி இரவு ரெக்கார்டிங் செய்தால் நாளை ஷூட்டிங் போகலாம் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட வாலி, என் மனைவிக்கு சிசேரியன் நடக்க உள்ளது. நான் ஃபுல் டென்ஷனில் இருக்கிறேன். இப்போது பாடல் எழுதுவது என்பத முடியாத காரியம். உங்களுக்கு அவசரம் என்றால் வேறு ஏற்பாடுகள் செய்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதை கேட்ட தயாரிப்பாளர் சிவசாமி, சிசேரியன் என்ன நீங்களா பண்ண போறீங்க என்று கேட்க, கோபமான வாலி, போன கீழ வைடா அடிச்சி ஒடச்சிடுவேன் என்று திட்டி போனை வைத்துள்ளார்.
மறுநாள் வாலியை சந்தித்த எம்.ஜி.ஆர் பாடல் பதிவை 2 நாட்கள் தள்ளிவைத்துவிட்டேன். உங்கள் கோபம் நியாமானது என்று கூறியுள்ளார். அதன்பிறகு ஹாஸ்பிட்டலுக்கு வந்து குழந்தையை பார்த்து ஒரு பவுன் தங்க காசு கொடுத்துவிட்டு வாழ்த்தி சென்றதாக வாலி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“