தமிழ் சினிமாவின் வாலிப கவிஞர் என்று அழைக்கப்படும் வாலி, எழுதிய ஒரு பாடலில், ரசிகர்களுக்கு பரிட்சை வைக்கும் வகையில், சில வார்த்தைகளை விட்டுவிட்டு பாடலை எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் இந்த வகையில் வந்த ஒரு பாடல் இதுதான்.
தமிழ் சினிமாவின் இயக்குனர் திலகம் என்று அழைக்கப்பட்டவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். 1962-ம் ஆண்டு வெளியான சாரதா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், அடுத்து தெய்வத்தின் தெய்வம் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த இரு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து 3-வது படமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய படம் தான் கற்பகம்.
ஜெமினி கணேசன் – சாவித்ரி இணைந்து நடித்த இந்த படத்தில் எஸ்.வி.ரங்காராவ் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். கே.ஆர்.விஜயா, முத்துராமன், வி.கே.ராமசாமி ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு, விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசையமைத்திருந்த நிலையில், கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுத, பி.சுசீலா அணைத்து பாடல்களையும் பாடியிருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று, வாலிக்கு பெரிய புகழை சேர்த்தது.
இந்த படத்தின் மூலம் தான் வாலி, தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் கவிஞராக உருவெடுத்தார். அனைத்து பாடல்களையும் எழுதிய வாலி ஒவ்வொரு பாடலுக்கும் பெரிய வித்தியாசத்தை காட்டியிருப்பார். அந்த வகையில், ‘ஆயிரம் இரவுகள் வருவதுண்டு, ஆனால் இதுதான் முதலிரவு என்ற பாடல் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடலில் தான் வாலி தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி, ரசிகர்களுக்கு பரிட்சை வைத்திருப்பார். அது என்ன என்று தெரியுமா?
இந்த பாடலில் வரும சரணத்தில், ‘வயதில் வருவது ஏக்கம், அது வந்தால் வராது... என்று மட்டும் எழுதியிருப்பார். என்ன வராது என்பதை ரசிகர்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதேபோல், வந்ததம்மா மலர் கட்டில், இனி வீட்டில் ஆடும்... என்று முடித்திருப்பார் ஆடுவது என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். வருவார் வருவார் பக்கம், அவர் பக்கம் வந்தால் வருமே வருமே... என்று முடித்திருப்பார். தருவார் தருவார் நித்தம், இதழ் தித்திக்க தித்திக்க.. என்று எழுதியிருப்பார்.
கோடிட்ட இடங்களை நிரப்புக என்பது போல் இந்த பாடலில் கடைசி வார்த்தைகளை விட்டு விட்டு வாலி பாடலை எழுதி முடித்திருப்பார். இந்த பாடல் இன்றுவரை நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த வகையில் வந்த ஒரு பாடல் இதுதான் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.