திரைத்துறையில் 64 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல புது டெக்னாலஜிகளை கொண்டு வந்த பெருமைக்கு சொந்தக்காரரான கமல்ஹாசன், கடந்த 1960-ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்த கமல்ஹாசனுக்கு வாலிப வயதில் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.
அந்த நேரத்தில், உதவி இயக்குனர், உதவி நடன இயக்குனர் என கேராவுக்கு பின்னால் இருந்து வேலை பார்த்து வந்த கமல்ஹாசன், மாணவன், அண்னை வேளாங்கன்னி, குறத்தி மகன், உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். அதன்பிறகு 1973-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
அதன்பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்த கமல்ஹாசன், ஒரு சில மலையாள படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் எழுத்தாளராக இருந்த கமல்ஹாசன், அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கான சேச்சி 420 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு தமிழில், ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் 1,2 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
தற்போதைய தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் நடன இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமைகளை வைத்து தனக்கென தனி ஆளுமையை உருவாக்கியுள்ள கமல்ஹாசன், திரைத்துறையில் கால் பதித்து இன்னுடன் 64 வருடங்கள் நிறைவடைகிறது. அவரின் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் கடந்த 1960-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ந் தேதி வெளியானது.
64 ஆண்டுகள் நிறைவு செய்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், 64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக. உங்கள் நான் என பதிவிட்டுள்ளார்.
இந்த நாளில் கமல்ஹாசனுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், கமல்ஹாசன் அரியணையில் அமர்ந்துள்ளது போன்ற ஒரு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பதிவில்,
ஏற்றத்தாழ்வுகள், வெற்றிந தோல்விகள் சவால்கள் என எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். ஆனால், உலக நாயகனுக்கும், தொழில்துறையை உயர்த்துவதற்கான அவரது அயராத முயற்சிக்கும் இடையில் எதுவும் வர முடியாது. 6 தசாப்தங்களாக இணையற்ற பேரரசர் சினிமாவில் தனது 64வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் என பதிவிட்டுள்ளார். ஸ்ருதிஹாசனின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil