இந்திரா காந்தி குறித்து தவறாக பேசியதாக கவிஞர் புலமைப்பித்தன் மீது புகார் வந்ததை தொடர்ந்து எம்.ஜி.ஆர் இது குறித்து விசாரிக்காமல் என் முகத்தில் முழிக்காதீங்க என்று சொல்லி புலமைப்பித்தனை வெளியில் அனுப்பியுள்ளாார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த புலமைப்பித்தன், 1964-ல் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே திரைப்படங்களில் பாடல் எழுதுவதற்காக முயற்சி செய்துள்ளார். அவரது முயற்சிக்கு பலனளிக்கும் வகையில், 1968 இல் எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய ’நான் யார் நான் யார்’ என்ற பாடல் அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அதன்பிறகு அடிமைப் பெண் படத்தில் எழுதிய ’ஆயிரம் நிலவே’ பாடல் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு ஹிட் பாடல்களை எழுதிய புலமைப்பித்தன், திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியது மட்டுமல்லாமல், "புரட்சித்தீ", "பாவேந்தர் பிள்ளைத்தமிழ்" ஆகிய கவிதை புத்தகங்களையும், "எது கவிதை" என்ற புத்தகத்தையும் எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தாலும், அவ்வப்போது தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது புலமைப்பித்தனின் குணம். அதேபோல் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர் தான் புலமைப்பித்தன்.
இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் முதல்வர் இருக்கையில் அமர்ந்திருந்தாலும், அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த இந்திரா காந்தியுடன் கூட்டணிக்காக முயற்சி செய்துள்ளார் எம்.ஜி.ஆர். அதே சமயத்தில் இலங்கையில் நடைபெற்ற போரால், பல தமிழர்கள் மரணமடைந்தது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த பிரச்சனைக்கு, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி எதாவது செய்ய வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
அந்த சமயத்தில் தனது மூத்த மகன் சஞ்சய் காந்தி இறந்த வருத்தத்தில் இருந்த இந்திரா காந்தியை விமர்சிக்கும் வகையில், கவிஞர் புலமைப்பித்தன் ஒரு கவியரங்கத்தில் கவிதை வாசித்துள்ளார். 1981-ம் ஆண்டு தஞ்சை தமிழ் பல்கலைகழகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த எம்.ஜி.ஆர், அதற்காக புலமைப்பித்தன் தலைமையில் ஒரு கவியரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளார். இந்த கவியரங்கத்தில் கவிதை வாசித்த புலமைப்பித்தன், பிரதமர் இந்திரா காந்தி இலங்கை தமிழர் பிரச்சனைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
சஞ்சயினை இழந்துவிட்ட புத்திரசோக சஞ்சலத்தை உணர்ந்தவள் நீ, கொஞ்சம் நீ மனது வைத்து முறைத்து பார்த்தால் கொழும்புக்கு கொழுப்பு அடங்கும். இல்லை என்றால் வஞ்சகம் நீ செய்துவிட்டால் என்று என் வாய் சொல்ல மறுக்கும் ஆனால் என் மனம் சொல்லாதா என்று இந்திரா காந்தியை விமர்சிக்கும் வகையில் படித்துள்ளார். இதை பார்த்த அதிமுக எம்.எல்ஏக்கள். நாம் கூட்டணிக்கு முயற்சி செய்யும்போது இவர் இப்படி பேசிவிட்டாரே என்று எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அதை கேட்ட எம்.ஜி.ஆர் எதுவும் விசாரிக்காமல் புலமைப்பித்தனை வெளியில் அனுப்பிவிடுகிறார்.
சில நாட்களுக்கு பிறகு இதை பற்றி யோசித்த எம்.ஜி.ஆர் தன்னிடம் புலமைப்பத்தன் நெருக்கமாக இருப்பதை பிடிக்காதவர்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்பதை உணர்ந்து, மீண்டும் அவரை அழைத்து அதிமுக அலுவலகத்தில், தொண்டர்களுடன் அமர்ந்து அந்த கவிதையை மீண்டும் வாசிக்க சொல்கிறார். புலமைப்பித்தன் வாசிக்க, அர்த்தத்தையும் புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், இதில் இவர் மீதும் தவறு இல்லை. உங்கள் மீதம் தவறு இல்லை. நான் புரிந்துகொண்டேன். எல்லோரும் புரிந்துகொண்டால் சரி என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு புலமைப்பித்தனுடன் மீண்டும் எம்.ஜி.ஆர் நெருக்கமாக இருந்த நிலையில், அவரை பற்றி குறை சொன்ன பலரும் அதன்பிறகு அந்த பேச்சையை எடுக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“