தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த எம்.ஜி.ஆர், பிடிக்காமல் ஒரு கதையில் நடித்து, அந்த படம் பெரிய தோல்வியை சந்தித்த நிலையில், அவரது ரசிகர்கள் இயக்குனரின் வீட்டில் கல் எறிந்த சம்பவம் நடந்துள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
சிறுவயதில் நாடக நடிகராக இருந்து பின்னாளில், சினிமாவில் துணை கேரக்டரில் நடித்து 10 ஆண்டுகளாக போராட்டத்திற்கு பின் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் எம்.ஜி.ஆர், ஒரு சில வெற்றிப்படங்களை கொடுத்த இவருக்கு ஒரு கட்டத்தில் சரியான பட வாய்ப்பு இல்லாத நிலையில், தானே இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக மாறி நாடோடி மன்னன் என்ற படத்தை எடுத்தார்.
தனது திரை வாழ்க்கையில் சேமித்து வைத்து பணம் போக, பெரிய தொகையை கடனாக பெற்று பெரிய போராட்டங்களுக்கு இடையே இந்த நாடோடி மன்னன் படத்தை இயக்கிய எம்.ஜி.ஆருக்கு அந்த படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், சினிமாவில் ஒரு நிலையான இடத்தையும் பெற்று கொடுத்தது. அதன்பிறகு தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆர், நடிகை டி.ஆர்,ராஜகுமாரியின் சகோதரரான டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஒருமுறை எம்ஜி.ஆரை சந்தித்த டி.ஆர்.ராமண்ணா ஒரு கதையை கூறியுள்ளார். அந்த கதை எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்திருந்தாலும், இந்த கதையை என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அதனால் இந்த கதையில் நான் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் ராமண்ணா, அவரை விடாமல் சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். இந்த கதை எனக்கு செட் ஆகாது. இது ஆழமான கதை. என் ரசிகர்களுக்கு கதை முக்கியமல்ல. எனது ஆக்ஷன் தான் முக்கியம் என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர்.
மேலும் நான் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறேன் தம்பி சிவாஜி தான் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அவருக்கு இந்த கதை செட் ஆகும். என்னை வைத்து எடுத்தால் உனக்கு பணம் நஷ்டமாகும் என்று எம்.ஜி.ஆர், சொல்ல, படம் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும், இயக்குனரிடம் கையில் தான் உள்ளது இந்த படத்தை நான் வெற்றிப்பமாக மாற்றி காட்டுகிறேன். இந்த படத்தின் மூலம் உங்கள் பாணி மாறும் என்று ராமண்ணா எவ்வளவோ சமாதானப்படுத்தியும் எம்.ஜி.ஆர் மறுத்துள்ளார்.
இதனையடுத்து டி.ஆர்.ராமண்ணா இது குறித்து டி.ஆர்.ராஜகுமாரியிடம் சொல்ல, டி.ஆர்.ராஜகுமாரி எம்.ஜி.ஆரிடம், தம்பிக்கு இந்த கதையின் மேல் நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் நடித்து மட்டும் கொடுங்கள் என்று சொல்ல, அதன்பிறகு பிடிக்காமல் எம்.ஜி.ஆர் அந்த படத்தில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் சொன்னது போலவே அந்த படம் பெரிய தோல்வியை தழுவிய நிலையில், இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் வீட்டில் எம்.ஜி.ஆர் கல் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த படத்தின் பெயர் தான் பாசம்.
எம்.ஜி.ஆர், கல்யாண் குமார். சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். 1962-ம் ஆண்டு வெளியான இந்த படம் அந்த ஆண்டின் பெரிய தோல்விப்படாக அமைந்தது. இந்த படத்தில் திருடனாக நடித்திருந்த எம்ஜி.ஆர் படத்தின் இறுதியில் இறந்துவிடுவது போல் அமைந்த காட்சியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தகவலை ஓ.எச் சினிமா யூடியூப் சேனலில், பெருதுளசி பழனிவேல் என்பவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“