Advertisment

சினிமாவை துறந்த கருணாநிதி... காரணமாக அமைந்த எம்.ஜி.ஆர் படம் : என்ன நடந்தது?

1935-ம் ஆண்டு சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்த முதல் படம் ராஜகுமாரி. இந்த படத்தின் மூலம் கருணாநிதி வசனகர்த்தாவாக அறிமுகமானார்

author-image
WebDesk
New Update
MGR Karunanithi

எம்.ஜி.ஆர் - கருணாநிதி

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி பாதை அமைத்து வெற்றிக்கொடியை நாட்டியவர்களின் முக்கியமானவர் கலைஞர் மு.கருணாநிதி. தொடக்கத்தில் சினிமாவுக்கு வசனங்கள் எழுதிய கருணாநிதி, ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே விலகி சென்றார். இதற்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆர் நடித்த படம் தான்.

Advertisment

1947-ம் ஆண்டு வெளியான ராஜகுமாரி என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானவர் கலைஞர் மு.கருணாநிதி. 1935-ம் ஆண்டு சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்த முதல் படம் இதுதான். இந்த படத்திற்கு முழு வசனமும் கருணாநிதி எழுதியிருந்தாலும், படத்தில் வசனம் ஏ.எஸ்.ஏ சாமி என்றும், வசன உதவி கருணாநிதி என்றும் இருந்தது.

அதனைத் தொடர்ந்து, 1948-ம் ஆண்டு அபிமன்யூ என்ற படத்திற்கு வசனம் எழுதியிருந்தார் கருணாநிதி. இந்த படத்திலும் எம்.ஜி.ஆர் தான் நாயகனாக நடித்திருந்தார், ஜூபிட்டர் பிச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. படம் வெளியான சமயத்தில் கருணாநிதி தனது குடும்பத்துடன் சென்று இந்த படத்தை பார்த்துள்ளார். முதல் படத்தில் வசன உதவி கருணாநிதி என்று இருந்தாலும் 2-வது படத்தில் அவரது பெயரே இடம்பெறவில்லை.

கருணாநிதிக்கு இது பேரதிர்ச்சியாக இருந்த நிலையில், உடனடியாக இது குறித்து ஜூபிட்டர் பிச்சர்ஸ் நிறுவனத்திடம் சென்று, ஏன் என் பெயரை படத்தில் போடவில்லை. என்று கேட்க, உன் பெயர் கொஞ்சம் பிரபலம் ஆகட்டும் அதன்பிறகு போடலாம் என்று நிறுவனத்தின் அதிபர் கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த கருணாநிதி, இனி சினிமாவே வேண்டாம் என்று தனது சொந்த ஊரான திருவாரூருக்கு சென்றுவிட்டார்.

2 எம்.ஜி.ஆர் படங்களுக்கு வசனம் எழுதிய கருணாநிதி அதன்பிறகு சினமாவுக்கு முழுக்கு போட்டார். ஆனாலும் அவர் குண்டலகேசி என்ற நூலை அடிப்படையாக வைத்து மந்திரி குமாரி என்ற நாடகத்தை எழுதியுள்ளார். இந்த நாடகம் குடந்தையில் நடத்தப்பட்டபோது, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இது குறித்து கேள்விபட்ட மார்டன் தியேட்டர் கவிஞர் காமு ஷெரிப் நாடகத்தை பார்த்துள்ளார். அவருக்கு நாடகம் பிடித்துவிட, உடனடியாக டி.ஆர்.சுந்தரம், மற்றும் எல்லீஸ் ஆர் டங்கன் ஆகியோரிடம் இது பற்றி கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர் டி.ஆர்,சுந்தரம், இயக்குனர் எல்லீஸ் ஆர். டங்கன் ஆகியோர் மந்திரி குமாரி நாடகத்தை பார்த்துள்ளனர். அவர்களுக்கு இந்த நாடகம் பிடித்ததை தொடர்ந்து இதனை படமாக்கும் உரிமையை பெற முடிவு செய்துள்ளனர். அதற்காக திருவாரூர் சென்று கருணாநிதியை சந்தித்து இதற்கான உரிமைய வாங்கி வருமாறு கவிஞர் காமு ஷெரிப்பை அனுப்பியுள்ளனர். 2 வருட இடைவெளிக்கு பிறகு கருணாநிதிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு இந்த படம். ஆனால் இதை ஏற்க அவர் தயங்கியுள்ளார்.

முதல் படத்தில் கிடைத்த அனுபவமே இந்த வாய்ப்பை அவர் ஏற்க தயங்கியதற்கு காரணம் என்று தெரிந்த காமு ஷெரிப், எங்க முதலாளி திறமைசாளிகளை மதிப்பவர் நீங்கள் வந்து பாருங்கள் என்று அவரை சமாதானம் செய்து அழைத்து சென்றுள்ளனர். அவர் சொன்னது போலவே மந்திரி குமாரி படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் – எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்க, கருணாநிதி திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தில் எம்.ஜி.ஆர் தான் நாயகனாக நடிக்க வேண்டும் என்று கருணாநிதி மாடர்ன் தியேடடர்ஸ் அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதே போல் மந்திரி குமாரி படத்திற்கு முன்னதாக வெளியாக மருதநாட்டு இளவரசி படத்திற்கு கருணாநிதி தான் வசனம் எழுத வேண்டும் என்று எம்.ஜி.ஆர் உறுதியாக இருந்துள்ளார். அதன்பிறகு தனது எழுத்துக்களால் தமிழ் சினிமாவில் பெரும் புரட்சி செய்த கருணாநிதி 1952-ல் வெளியான சிவாஜியின் பராசக்தி படத்தின் மூலம் உச்சத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment