பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியின் “அகிலன்” படம் இன்று வெளியாகி இருக்கிறது.
கதைக்களம்:
ஹார்பரில் சட்டவிரோத வணிகம் செய்யும் கிரேன் ஆபரேட்டர் வேலை செய்து வருகிறார் அகிலன் (ஜெயம் ரவி). இவை அனைத்துக்கும் தலைவனாக (வில்லன்) கபூர் வருகிறார். அவரை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என ஜெயம் ரவி பல விஷயங்களை செய்கிறார்.அப்போது வெவ்வேறு நாடுகளில் உளவு வேலை செய்யும் ஒருவனை கடத்தும் பொறுப்பு அகிலனிடம் கொடுக்கப்படும், அதே வேளையில் இவர் செய்த குற்றங்களுக்காக போலீஸ் இவரை கைது செய்ய முயற்சிக்கிறது. இதையெல்லாம் தாண்டி அந்த நபரை அகிலன் கடத்தினாரா?இல்லை போலீசில் பிடிபட்டாரா? என்பதே கதை.
நடிகர்களின் நடிப்பு
பொன்னியின் செல்வனில் அரசனாக நம்மை ரசிக்க வைத்த ஜெயம் ரவி இப்படத்தில் ஹார்பர் தொழிலாளியாக அசத்தியிருக்கிறார். அவரது உடல் மொழியும் பேச்சுக்களும் ஹார்பரில் வேலை செய்யும் கிரேன் ஆபரேட்டர் போலவே மாறி இருப்பது சிறப்பு. கதைக்குத் தேவையான நடிப்பு நடனம் மற்றும் ஆங்காங்கே வரும் காதல் என அனைத்திலும் சிறந்த நடிகனாக ஜொலிக்கிறார். நாயகிகளாக வரும் பிரியா பவானி சங்கர், தான்யா ஆகியோருக்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் கொடுத்த ரோலை சிறப்பாக செய்துள்ளனர். வில்லன் கபூர் கம்பீரமான நடிப்பால் மிரட்டடுகிறார். இவை தவிர்த்து, படத்தில் பல குணச்சித்திர நடிகர்கள் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.
இயக்கம் மற்றும் இசை
இப்படத்தின் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து “பூலோகம்” படத்தை இயக்கியிருந்தவர். “பூலோகம்” படத்தில் எப்படி ஜெயம் ரவியின் தனித்துவமான கதாபாத்திரம் பேசப்பட்டதோ, அதேபோல தான் இப்படத்திலும் அவருடைய கேரக்டரை தனித்துவமாக எழுதி ஸ்கோர் செய்திருக்கிறார். கடல் வணிகம் மூலமாக ஹார்பரில் நடைபெறும் குற்றங்களும், கடத்தல்களும் எவ்வாறு உலகம் முழுவதும் இருக்கும் மக்களை பாதிக்கிறது என்பதை தெளிவாக திரைக்கதையில் எழுதி இருப்பதற்கு வாழ்த்துக்கள். மேலும் கடல் வணிகம் மூலம் முதலாளிகளும், அரசியல்வாதிகளும் செய்யும் ஊழலையும் அதனால் ஏற்படும் பசி, பட்டினி,உணவு பஞ்சம் வணிக பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் சாதாரண மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது போன்ற காட்சிகள் அழுத்தமாக பதிவு செய்து மிகப்பெரிய விழிப்புணர்வை மக்களுக்கு கொடுத்ததற்கு சல்யூட். படத்தின் நிறைய காட்சிகள் கடல், கப்பல், துறைமுகம் முதலியவற்றை சுற்றியே நடைபெறுகிறது,ஆனால் அவை எந்த இடத்திலும் போர் அடிக்காதவாறு தன் அழகான ஒளிப்பதிவினால் படத்தை உயர்த்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
சாம் சி.எஸ்’ன் பாடல்கள் பெரியளவு ஈர்க்கப்படவில்லை என்றாலும் அவரின் பின்னணி இசை படத்திற்கு முதுகெலும்பாக திகழ்கிறது.பல காட்சிகளில் நடிகர்களையும் தாண்டி இவருடைய இசை தான் நம்மை ஈர்க்கிறது.
பாசிடிவ்ஸ்:
*வலுவான கதையும் அதை சுற்றி எழுதப்பட்ட அழுத்தமான திரைக்கதையும் மக்களை கவர்கிறது.
*ஜெயம் ரவி மற்றும் அனைத்து நடிகர்களின் மிரட்டலான நடிப்பு.
*பின்னணி இசை படத்தின் தன்மையை நம்முள் ஆழமாக கடத்துகிறது.
*அழுத்தமான வசனங்கள் விழிப்புணர்வை தருகிறது.
*அழகான ஒளிப்பதிவும், அளவான எடிட்டிங்கும் சிறப்பு.
நெகட்டிவ்ஸ்:
*இரண்டாம் பாதியின் கதைக்களம் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கலாம்.
*சில இடங்களில் லாஜிக் மீறல்கள் தெரிகிறது.
*மக்களுக்கு தேவையான ஒரு சில சமூக கருத்துக்களை வசனமாக வைக்காமல் காட்சியாக வைத்திருந்தால் இன்னும் படத்தின் வீரியம் அதிகரித்திருக்கும்.
ஆனால் மொத்தமாக ஒரு படமாக பார்த்தால் இந்த பலவீனங்கள் பெரிய அளவில் நம்மை பாதிக்கவில்லை.
மொத்தத்தில் ஒரு ஆழமான கடல் அரசியலையும் அதன் பின்னணியையும், மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு சிறந்த கமர்சியல் படமாக அகிலன் அமைந்திருக்கிறது.
*Overall – A Fantastic Social Concern Commercial Movie.
*Marks – (4/5)🌟🌟🌟🌟
– நவீன் குமார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil