இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் கமல் ஹாசனின் விக்ரம் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி ஒரு வீடியோவையும் படக் குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் காட்சிகளுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் ஆகியோரின் அறிமுகமும் இந்த கிளிம்ஸ் வீடியோவில் காண்பிக்கப்படுகிறது. பின்னணி இசை அனிருத் என அசத்தலாக வருகிறது.
இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகவும் அதிகப்படுத்தியுள்ளது. நடிகர் கமல் ஹாசனின் ரசிகர்கள் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
த்ரில்லிங் அனுபவம் தரும் வெப் சீரிஸ்
ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் வெப் சீரிஸ் ருத்ரா: த எட்ஜ் ஆஃப் டார்க்னஸ்.
இந்தத் தொடரில் கதாநாயகனாக பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார்.
ஈஷா தியோல், ராஷி கன்னா, அதுல் குல்கர்னி என முன்னணி நடிகர்கள் அனைவரும் இந்தக் கதையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
முதல் எபிசோடில் ராசி கன்னாவின் தாய், தந்தையை யாரோ கொலை செய்து விட அது யார் என்பதை கண்டறிகிறார் ஹீரோ அஜய் தேவ்கன். அவர் யார் என்பதை கண்டறியும்போது பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஆச்சரியம் மேலெழும்.
இதுபோன்ற ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு குற்றம் நிகழ அந்த வழக்கை இவர் எப்படி துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.
சிறப்பாக எடுக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் நிச்சயம் உங்களுக்கு திரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
நடிகர் கார்த்தி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!
வறண்ட வானிலை காரணமாக கொடைக்கானல் பகுதியில் கடந்த 5 நாட்களாக காட்டுத்தீ பரவி அரிய வகை மரங்கள், மூலிகைகள் எரிந்து வருகிறது.
வன விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகிறார்கள். இந்தநிலையில் காட்டுத்தீயை தடுக்க நடிகர் கார்த்தி விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கார்த்தி பேசும்போது, “கோடை வெயிலுக்கு இதமளிக்கின்ற, இயற்கை தந்த வரம் கொடைக்கானல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் இது கனவுப் பிரதேசம். எத்தனையோ வனவிலங்குகள், பறவைகள், தாவரங்கள் இங்கே இருக்கின்றன. ஒரு எச்சரிக்கை. இது நெருப்புக் காலம். எளிதில் பற்றிக்கொள்ளும் நிலையில் உள்ளது காடு.
ஒரு சிறு தீப்பொறி பட்டால் போதும். காட்டுடன் சேர்ந்து வன விலங்குகளும், பறவைகளும் அழிந்துபோகிற அபாயம் இருக்கிறது. அதனால் பொதுமக்களாகிய நாம் எல்லோரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காட்டுத் தீக்கு எதிரான இந்தப் போரில் வனத் துறையுடன் இணைந்து நிற்போம். நன்றி!” என்று கூறியுள்ளார்.
மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் சமந்தா
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா ‘பேமிலி மேன் 2‘ வெப் தொடரில் போராளியாக நடித்து அசத்தினார்.
பேமிலி மேன் 2 வெப் தொடருக்கு பிறகு சமந்தாவுக்கு இந்தி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன.
இந்த நிலையில் சமந்தா இன்னொரு இந்தி வெப் தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த தொடரை இரட்டை இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீ.கே ஆகியோர் இணைந்து இயக்குகிறார்கள். அமெரிக்காவில் பிரபலமான சிட்டாடல் என்ற வெப் தொடரின் கதையை அடிப்படையாக வைத்து இந்த தொடரை உருவாக்குகிறார்கள்.
இந்த இயக்குநர்கள் ஃபேமிலி மேன் இரண்டு பாகங்களையும் இயக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் இந்தி நடிகர் வருண் தவான் கதாநாயகனாக நடிக்கிறார். மும்பையில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படப்பிடிப்பில் சமந்தாவும் இணைந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“