Tamil cinema news in tamil: தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகுமார். இவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் தமிழில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். இவரது மருமகளும் முன்னணி நடிகையுமான ஜோதிகா தற்போது மீண்டும் படங்கள் நடித்து வருகிறார். மற்றும் இவரது மகள் பிருந்தா சிவகுமார் பின்னணி பாடகி ஆவார்.
நடிகர் சிவகுமார் 1965 -ம் ஆண்டு வெளிவந்த 'காக்கும் கரங்கள்' திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து என்னெற்ற படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்துள்ள சிவகுமார், இதுவரை 190 திரைப்படங்களில் நடித்துள்ளார். 2001-ம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த 'பூவெல்லாம் உன் வாசம்' படம் தான் இவர் நடித்த கடைசி திரைப்படம்.
நடிகர் சிவகுமார் திரைப்படத்தோடு நின்றுவிடாமல், சின்னத்திரையிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகராக வலம் வந்தார். 'வீட்டுக்கு வீடு வாசப்படி', 'பந்தம்', 'சித்தி', 'அண்ணாமலை' ‘லட்சுமி’ போன்ற பல்வேறு ஹிட் தொடரில் நடித்துள்ளார். இவரோடு சின்னத்திரையில் தோன்றியவர்கள் இன்னும் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். ஆனால் இவர் மட்டும் ஏன் தொடர்ந்து சின்னத்திரையில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் என்று இதுவரை கூறவில்லை.
நடிகர் சிவகுமார் சின்னத்திரையில் நடிப்பதை நிறுத்த காரணம் ஒரு சீரியல் நடிகை தான் என்று கூறப்படுகிறது. அவர் ஒரு முறை ஒரு சீரியலுக்காக நடித்துக் கொண்டிருக்கையில், அந்த செட்டில் சீரியல் நடிகை ஒருவர் போனில் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தாராம். அதற்கு சிவகுமார் அந்த நடிகையிடம் 'நான் நடித்து முடிக்கும் வரை கொஞ்ச நேரம் போன் பேசாமல் இருங்கள்' என்று கூறியுள்ளார். ஆனால் அந்த நடிகையோ 'இத்தனை வருசமாக நடிக்கிறீங்க, நீங்க பேசறத டப்பிங்ல பாத்துக்கோங்க' என வெடுக்கென்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் மனமுடைந்த நடிகர் சிவகுமார் சீரியலில் மட்டுமல்லாமல் திரையில் தோன்றுவதைக் கூட நிறுத்திவிட்டார்.
தற்போது புத்தகங்கள் படிப்பதிலும், எழுத்துவதிலும் மற்றும் ஓவியம் வரைவதிலும் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil