சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன்பிறகு ஹீரோவாக உயர்ந்து பின்னாளில் தமிழகத்தின் முதல்வராக கால்பதித்த எம்.ஜி.ஆர் தனது குழுவாக ஏற்றுக்கொண்டவர் தான் என்.எஸ்.கிருஷ்ணன். இவரை பார்த்து தான் எம்.ஜி.ஆர் தானம் செய்ய கற்றுக்கொண்டதாகவும் தகவல் உள்ளது.
க்ளாசிக் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர் பாடகர் என்று தனக்கென தனி அடையாளத்தை பெற்றவர் என்.எஸ்.கிருஷ்ணன். 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ந் தேதி நாகர்கோவிலில் பிறந்த இவர், 1935-ம் ஆண்டு வெளியான மேனகா என்ற படத்தின் மூலம் திரைத்துறையிவல் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் அறிமுக திரைப்படமான சதிலீலாவதி படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து என்.எஸ்.கிருஷ்ணன் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் தனது நகைச்சுவை மூலம் சமூகத்திற்கு தேவையாக கருத்துக்களை வைத்து அசத்தியவர். கலைவாணர் என்ற பட்டத்துடன் வலம் வந்த என்.எஸ்.கிருஷ்ணன், நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்தாமல் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.
என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆரே தனது குருவாக ஏற்றுக்கொண்டார். சினிமா உலகில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை தீர்த்து வைக்க என்.எஸ்.கே வை அழையுங்கள் என்று சொல்லும் அளவுக்கு அனைவருடனும் அன்பாக பழகக்கூடிய குணம் கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன். அதேபோல் தானம் தர்மம் செய்வதற்கு பெயர் பெற்ற இவர், தன் வாழ்நாளின் இறுதிவரை தானம் செய்துள்ளார்.
சம்பாதிக்கும் பணத்தை அள்ளி அள்ளி பிறருக்கு கொடுத்தால், கடனாளியாக ஆகியிருந்த என்.எஸ்.கே,விடம் கடனை திருப்பி கொடுக்க கோரி, கடன் கொடுத்தவர்கள் போன் செய்துகொண்டே இருந்துள்ளனர். அதேபோல் உதவி கேட்டு என்.எஸ்.கே வீட்டின் முன்பு பலரும் அமர்ந்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாத என்.எஸ்.கே, உடனடியாக வெளியில் வந்து தனது காரை எடுத்துக்கொண்டு கிளம்பியுள்ளார்.
தனது வீட்டின் வெளியில் இருந்தவர்களை பார்த்துவிட் சென்ற இவர், தயாரிப்பாளர் ஒருவரிடம் சென்று கடன் வாங்கி வந்து, தன்னிடம் உதவி கேட்டு அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளார். அதேபோல் உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என்.எஸ்.கேவை பார்க்க வந்த எம்.ஜி.ஆர், கட்டுக்கட்டாக பணத்தை கொடுத்துள்ளார். இதை கட்டுக்கட்டாக வேண்டாம் சில்லறையாக கொடு ராமச்சந்திரா என்று கேட்டுள்ளார் என்.எஸ்.கே.
இதை கேட்ட எம்.ஜி.ஆர், ஏன் அண்ணே என்று கேட்டபோது, கட்டக்கட்டாக இருந்தால் எப்படி நான் கொடுப்பது, அதுவே சில்லறையாக இருந்தால், என்னை பார்க்க வரும் அனைவருக்கும் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். அதேபோல் எம்.ஜி.ஆர் கொடுத்த அனைத்து பணத்தையும் சில்லறையாக மாற்றி தான் இறக்கும்வரை அந்த மருத்துவமனையில் இருந்த அனைத்து நோயாளிகளுக்கும், தன்னை பார்க்க வந்த அத்தனை பேருக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளார் என்.எஸ்.கே.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“