பொதுவாக நம் நாட்டில் எந்த புயல் அடித்தாலும் நமக்கு அது வேதனையும், துயரையும் மட்டுமே கொடுக்கும். ஆனால் தமிழ்நாட்டில் பிறந்து இன்று உலகம் முழுவதும் சுழன்று அடித்துக் கொண்டிருக்கும் இந்த இசை புயலால் மக்களுக்கு எப்போதுமே ஆனந்தம் மட்டுமே, இந்தப் புயல் உருவாகி இன்றுடன் 55 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இன்றும் புயலின் தாக்கமும்,ஈர்ப்பு எள்ளளவும் இன்னும் குறையவில்லை என்பது வியப்பே.
1967'ல் சென்னையில் பிறந்த ஏ.அர்.ரஹ்மான், 1992 ஆம் ஆண்டு பாலச்சந்தர் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார். அப்படத்தில் வரும் பின்னணி இசை இப்போதும் நம் மனதை வருடுவதை மறுக்க முடியாது. அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏதோ ஒரு புது ஆனந்தத்தையும், புது இசை உணர்வையும் மக்களுக்கு கொடுத்தது.தன் முதல் படத்துக்கு பிறகு ரகுமான், புயலைபோல வேகம் எடுத்தார்.
அடுத்தடுத்த அனைத்து படங்களிலும் ஹிட் ஆல்பங்களை அள்ளி வீசினார். இந்த இசைப்புயல் தமிழகத்தில் மட்டுமே தாக்காமல் எல்லைத்தாண்டி பயணித்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,ஹிந்தி, மலையாளம் மொழிகளில் உள்ள இளம் இயக்குனர்கள், மூத்த இயக்குனர்கள் என அனைவரின் படத்திலும் பங்காற்றி சிறப்பான இசையை உலகறியச் செய்தவர்.
பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து தளங்களிலும் தன் இசையை ஒலிக்கச்செய்தார்.அவருடைய ஆத்மார்த்தமான இசை அவருக்கு பணம்,பேர், புகழ் என அனைத்தையும் வாரி வழங்கியது,அதிலும் குறிப்பாக தற்போது வரை ரஹ்மான் அவர்கள் 138 விருதுகளை தன்வசம் வைத்துள்ளார், இதில் தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது,அகாடமி விருது முதலியவையும் அடங்கும். இந்த எல்லா விருதிற்கும் மணிமகுடம் சூட்டும் வகையில் 2009 ஆம் ஆண்டு "ஸ்லம்டாக் மில்லினரி" என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கி தமிழ்நாட்டிற்கு,தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்தவர் ரஹ்மான்.
தன்னை நோக்கி எத்தனை பெரிய விருது வந்தாலும் அதை கைகளில் மட்டுமே வாங்கிக்கொண்டு தலைக்கு ஏற்றாத எளிமை. உலகமே தன்னை புகழ்ந்த அந்த நொடியிலும் ''எல்லா புகழும் இறைவனுக்கே'' என்றுக்கூறிய தன்னடக்கம், எவ்வளவு உயரம் சென்றாலும் தனது கால்களை தரையிலேயே வைத்திருக்கும் அவருடைய நிதானமும், பக்குவமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.இன்பம்,துன்பம்,மகிழ்ச்சி,வெற்றி, தோல்வி, ஏமாற்றம் என நம்முள் இருக்கும் அனைத்து உணர்ச்சிகளையும் தன் இசையாலும், பாடல்களாலும் தட்டி எழுப்பிய மந்திரக்காரர் ரஹ்மான்.
காதல்,நட்பு, குடும்பம்,தேசப்பற்று தனிமை என நம் வாழ்வின் அனைத்து விதமான காலங்களிலும் இவருடைய இசையுடனே நாம் பயணித்து வந்திருக்கிறோம். அவர் இன்னும் பல அழியாத இசையை கொடுத்து, விருதுகளை வாங்கி, மகிழ்ச்சியோடு வாழ அவருடைய இந்த 56வது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவோம்.
நவீன் குமார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“