scorecardresearch

ரசிகர்கள் வைத்த பற்றுதல… அவன் நடித்த படம் பத்து தல… டி.ஆர் பேச்சை கைத்தட்டி ரசித்த சிம்பு

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

T.R

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகரும் இயக்குனரும் தனது தந்தையுமான டி.ராஜேந்தர் பேசியதை நடிகர் சிம்பு ரசித்து கேட்டு கைத்தட்டி மகிழ்ந்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு தற்போது பத்து தல என்ற படத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் ஸ்ரீமுரளி நடிப்பில் வெளியான மஃப்டி படத்தில் ரீமேக்கான தயாராகியுள்ள இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவராஜ்குமார் கேரக்டரில் சிம்புவும், ஸ்ரீமுரளி கேரக்டரில் கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ளனர்.

மேலும் பிரியா பவானி சங்கர், கெளதம்மேனன், கலையரசன், ரெட்டின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள பத்து தல படம் வரும் மார்ச் 30-ந் தேதி வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பத்து தல படத்தின் டீசர் பெரிய வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் முக்கிய பிரபலங்களுடன் சிம்புவின் ரசிகர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியிடப்பட்டது. சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்வர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்புவின் அப்பாவும், நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ராவணனுக்கு இருந்தது பத்து தல நான் ராம பக்தன் ராவணனுக்கு ஏன்டானு கேட்டான் பத்து தல…ராமன் கையால் வெட்டுப்பட வேண்டும் என்று வேண்டுதல அதனால்தான் அவனுக்கு பத்து தல இப்படி பேசுவது எனக்கு கைவந்த கல என்று வார்த்தைக்கு வார்த்தை தல என்று பேசி அசத்தினார்.

டி.ராஜேந்தர் பேசியதை கேட்டு அரங்கமே கைத்தட்டி ஆராவாரம் செய்திருந்த நிலையில்:, முன் வரிசையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் அமர்ந்திருந்த நடிகர் சிம்பு தனது அப்பாவின் பேச்சை கேட்டு கைத்தட்டி ரசித்துக்கொண்டிருந்தார்.

மேலும் தமிழகத்தில் பிறந்து ஆஸ்கார் வரை சென்று இந்த தமிழ் மண்ணின் பெருமையை, இந்திய நாட்டின் பெருமையை மதங்களுக்கெல்லாம் அப்பார்ப்பட்டு, நான் மதங்களை பார்ப்பவன் அல்ல நான் மனங்களை பார்ப்பவன், நான் இனங்களை பார்ப்பவன் அல்ல இதயங்களை பார்ப்பவன், நிறங்களை பார்ப்பவன் அல்ல நெஞ்சங்களை பார்ப்பவன் அப்படிப்பட்ட நான் அந்த ஆஸ்கார் வரை சென்றுவிட்டு வந்த அந்த ஆருயிர் தோழனுக்கு ஒரு நினைவு பரிசை கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

எதை கொடுக்க போகிறார்கள் என்று தெரியாது என்னை நினைவையே கொடுப்போமா? அவர் வாழ்க்கையிலே கண்ட கனவை கொடுப்போமா? இல்லை என் மகனோடு அவருக்கு உள்ள உறவை கொடுப்போமா? இல்லை இந்த இதய கதவை கொடுப்போமா? வந்தேன். ஒரு வீனையை கொடுத்தார். அந்த வீனை வெள்ளி. என் இதயத்தை தர நினைத்தேன் அள்ளி, அழைத்தவுடன் வந்தேன் துள்ளி. உனக்கு என் கையால் தந்தேன் அந்த வீனை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டு தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema pathu thala audio launch tr speech in tamil