தமிழ் சினிமாவில் தனது பாடல்கள் மூலம் தவிர்க்க முடியாத ஆளுமையாக இன்னும் இருந்து வரும் கவியரசர் கண்ணதாசன் மிகுந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்பது பலரும் அறியாத ஒரு உண்மை. அந்த வகையில் விபத்து நடந்த இடத்தில் கண்ணதாசன் நகைச்சுவையாக பேசியது குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியுள்ளார்.
சினிமா பாடல்கள் மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட முக்கிய கவிஞர் கண்ணதாசன். சாதாரணமாக இல்லாமல் தன் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள் கஷ்டங்கள், மகிழ்ச்சி என அத்தனை உணர்ச்சிகளையும் பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன், இயக்குனர் தயாரிப்பாளர், கதாசிரியர், உள்ளிட்ட பல திறமைகளை உள்ளடக்கி இருந்தார்.
அதேபோல் மனித வாழ்க்கையின் அத்தனை உணர்ச்சிகளையும் பாடலாக வெளிப்படுத்தியுள்ள கண்ணதாசனின் வரிகள் விரக்தியில் உள்ள அனைவருக்கும் ஆறுதலாகவும், மகிழ்ச்சியில் உள்ள பலருக்கும் மேலும் மகிழ்ச்சியை தரக்கூடியதாகவும் உள்ளது. அதேபோல் க்ளாசிக் சினிமாவை எடுத்துக்கொண்டால் கண்ணதாசனின் பாடல்கள் தனி இடம் பிடித்திருக்கும் என்ற நிலை இன்றளவும் உள்ளது.
பாடல், கட்டுரை, கதை, திரைக்கதை, படம் இயக்குவது, தயாரிப்பாளர் என பன்முறை திறமை கொண்ட கவியரசர் கண்ணதாசன், அதகமான நகைச்சுவை உணர்வு உள்ளார். திமுகவில் எம்.ஜி.ஆர், கருணாநிதி, சிவாஜி ஆகியோருடன் நெருக்கமாக இருந்த கண்ணதாசன், ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
அந்த காலக்கட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், கண்ணதாசனுக்கு கார் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த காரை பெற்றுக்கொண்ட கண்ணதாசன் இது தலைவர் கொடுத்த வண்டி என்று கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்துள்ளார். அப்போது ஒருநாள், இந்த காரில் சென்னையில் இருந்து திருச்சிக்கு மீட்டிங்கிற்காக வந்துள்ளார். அப்போது திண்டிவனம் அருகே விக்கிரவாண்டி பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, டிரைவர் தூக்கியதால், ஓரமாக சென்றுகொண்டிருந்த மாட்டு வண்டியின் மீது கார் மோதி விபத்துக்கொள்ளானது.
இந்த விபத்தில் வண்டி சுக்குநூறாக உடைந்த நிலையில், மாடுகள் காயம் இல்லாமல் உயிர்தப்பியுள்ளது. அப்போது வண்டி முன்பகுதி சேதமடைந்துள்ளது. கண்ணதாசன், விபத்துக்குள்ளான தனது வண்டியை பார்த்துவிட்டு, ஏன்டா விக்கிரவாண்டிக்கு வந்து விக்கிற வண்டியா ஆக்கிட்டீயே டா என்று டிரைவரிடம் நகைச்சுவையாக பேசியுள்ளார். விபத்தை பற்றிய கவலை இல்லாமல் கண்ணதாசன் நகைச்சுவையாக பேசியது குறித்து டேக் ஒன் யூடியூப் சேனலில் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.