தன்னை அவமானப்படுத்திய இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் இசையில் பாடல்களே எழுத மாட்டேன் என்று வாலி படத்தின் தொடக்க விழாவிலேயே சொல்லிவிட்டு சென்ற பலரும் அறிந்திடாத ஒரு தகவல்.
தமிழ் சினிமாவில் தனது வாழ்நாளின் கடைசி வரை வாலிப கவிஞர் என்று போற்றப்பட்டவர் தான் வாலி. எம.ஜி.ஆர் சிவாஜி தொடங்கி, ரஜினி கமல், விஜயகாந்த், சூர்யா சிம்பு வரை 5 தலைமுறை நடிகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, கவியரசர் கண்ணதாசன் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக வந்தவர். ஆனாலும் தொடக்கத்தில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
அந்த காலக்கட்டத்தில், வாலியின் நெருங்கிய நண்பரான கதாசிரியர் மாறா, எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சொல்ல, இவர் தான் இசையமைத்து வந்த இதயத்தில் நீ என்ற படத்தில் வாலிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதுதான் எம்.எஸ்.வி வாலி இருவரும் இணைந்த முதல் படம். 1963-ம் ஆண்டு வெளியான நீங்காத நினைவுகள் படத்தில் வாலி 2 பாடல்களை எழுதியிருப்பார். இந்த படத்திற்கு இசை கே.வி.மகாதேவன் கதாசிரியர் மாநா இந்த படத்திற்கு வசனங்களை எழுதியதோடு வாலிக்கு வாய்ப்பும் வாங்கி கொடுத்துள்ளார்.
அதே சமயம் கே.வி.மகாதேவனிடம், மாறா வாலியை அறிமுகம் செய்து வைக்கும்போது, உங்களுக்கு படம் எடுக்க வேண்டும் என்று ஆசையே இல்லையா? ஏன் வாலி தோலி என்று யாரையே கூட்டி வந்து பாட்டு எழுத வாய்ப்பு கேட்கிறீங்க என்று வாலியின் காதில் படும்படி கூறியுள்ளார். இதை கேட்ட வாலி அப்போது எதுவும் பேசாமல் பாடலை எழுதி கொடுத்துவிட்டு வந்துள்ளார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் வாலி தவிர்க்க முடியாத கவிஞராகிவிட்டார்.
அடுத்து சில ஆண்டுகள் கழித்து வாலிக்கு உடன்பிறப்பு என்ற படத்தில் பாடல் எழுத வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. எம்.ஜி.ஆர் சரோஜா தேவி இணைந்து நடித்த இந்த படத்திற்கு வசனங்கள் கே.பாலச்சந்தர் எழுதியிருந்தார். இந்த படத்திற்கு பாடல் எழுத வாலி ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், படத்தின் தொடக்க விழாவில் இவருக்கு முன்பணம் தட்டில் வைத்து அளிக்கப்பட்டுள்ளது.
அப்போது சுற்றி பார்த்த வாலி எங்கே எம்.எஸ்.வி – ராமமூர்த்தியை காணவில்லை என்று கேட்க, இந்த படத்திற்கு இசை கே.வி.மகாதேவன் என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். இதை கேட்ட வாலி, கே.வி.மகாதேவன் இசையில் நான் பாடல் எழுதமாட்டேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார். இதை பற்றி அறிந்த எம்.ஜி.ஆர் வாலியை அழைத்து சமாதானப்படுத்தியுள்ளார்.
நீங்கள் கே.வி.மகாதேவனுக்காக எழுத வேண்டாம் எனக்காக எழுத மாட்டீங்களா என்று கேட்க, வேறு வழியில்லாமல் வாலி ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பிறகு வாலி பாடல் எழுதி எம்.ஜி.ஆருக்கு அனுப்ப, எம.ஜி.ஆரிடம் இருந்து கே.வி.மகாதேவனுக்கு வந்து அதன்பிறகு டியூன் போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த படம் இன்றுவரை வெளியாகவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“